இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இனப் படுகொலையின் போது அங்கிருந்த ஈழத்தமிழர்கள் பலர் படகு மூலமாக உயிர் தப்பி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் இங்கு பல மாவட்டங்களிலும் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். நூற்றுக்கும் அதிகமான அந்த முகாம்களில் தற்போது 60 ஆயிரம் வாழ்கிறார்கள். முகாம்களுக்கு வெளியே காவல்துறையில் பதிவு செய்து வாழ்பவர்கள் ஏறத்தாழ 40 ஆயிரம் பேர்.
தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இத்தனை ஆண்டுகளாகியும் குடியுரிமை கிடையாது. அவர்கள் நாடு இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாக்குரிமையும் கிடையாது. ஓட்டு இல்லாவிட்டால் ஒரு கவுன்சிலர் வேட்பாளர்கூட அந்தப் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார். ஆனால், 2021ல் தி.மு.க ஆட்சி அமைந்தது முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர் வாழும் முகாம்கள் பலவற்றிற்கு சென்று ஆய்வு செய்கிறார். அங்குள்ள ஈழத்தமிழர்களின் தேவையைக் கேட்கிறார். அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளைத் திறந்து வைத்து, அவற்றைப் பார்வையிட்டு, அங்குள்ள பெண்களிடம் மகளிர் உரிமைத் தொகை வருகிறதா, சிறப்புத்தொகையுடன் சேர்த்து 5000 ரூபாய் வந்ததா, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் எப்படி செயல்படுகிறது என்றெல்லாம் கேட்டறிந்தார். அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதில் சொல்லி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
தி.மு.க. ஆட்சி வந்ததும், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம் செய்து சட்டமன்றத்தில் அறிவித்தார் முதலமைச்சர். பல ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வரும் தகரக்கொட்டகைகளுக்குப் பதில் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். அவர்களின் வாழ்க்கை மேம்பட 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை அறிவித்தார். இதனை செயல்படுத்தும் மறுவாழ்வுத்துறைக்கு உதவுவதற்கான இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு ஒன்றையும் அமைத்தார் முதலமைச்சர்.
ஐந்தாண்டுகள் நிறைவில், வேலூர் மாவட்டம் மேலமொணவூர் முகாமில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் வரை 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 4,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முகாம்களில் வசிக்கும் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாத உதவித்தொகை, குடும்பத் தலைவியருக்கு மகளிர் உரிமைத் தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான நிதியுதவி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திறன்மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம், விளையாட்டுப் போட்டிகள் என கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் கண்டுள்ளனர்.
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார்கள். குடியுரிமை இல்லை என்பதால் மருத்துவம் படிக்க முடியாது. அரசு வேலைக்கு செல்ல முடியாது. ஆனாலும், டி.சி.எஸ். போன்ற தனியார் நிறுவனங்களில் உயர்தர வேலையை அடைய முடிகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் போராட்டத்தின் விளைவாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உரிய ஆவணங்களுடன் 12 பேருக்கு குடியுரிமை பெற்றுத்தரப்பட்டுள்ளது. முகாமில் வசிக்கும் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை சட்டத்தில் உள்ள வழிகள் வாயிலாகக் குடியுரிமை பெறுவது குறித்தும், அதற்காக மத்திய பா.ஜ.க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஒத்துழைப்பு பணிகள் குறித்தும் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் சார்பில் இடைக்கால அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அண்மையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
பா.ஜ.க அரசு நினைத்திருந்தால் சி.ஏ.ஏ. சட்டத்திலேயே இந்து மதத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்க வழி செய்திருக்க முடியும். ஆனால், முஸ்லிம் எதிர்ப்புக்காக கொண்டு வரப்பட்ட பா.ஜ.க. அரசின் சி.ஏ.ஏ.வின் நோக்கம், இந்துக்களை பாதுகாப்பதல்ல என்பது இதன் மூலம் அம்பலமாகிவிட்டது.
மத்திய அரசு எப்போது குடியுரிமை தரும் என்று தெரியாத நிலையிலும், தமிழ்நாட்டை நம்பி வந்த இலங்கைத் தமிழர்களான யாரும் இங்கே அகதிகளில்லை. எங்கள் தமிழ்ச் சொந்தங்கள்தான் என்பதை கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களால் நிரூபித்திருக்கிறார் முதலமைச்சர். அகதி என்பது இதயத்தைப் பிளக்கும் வலி நிறைந்த வார்த்தை. அதை மாற்றி மாறுவாழ்வு முகாம் என்பதை பெயரிலும் செயலிலும் நிறைவேற்றி, ஓட்டு இல்லாத மக்களுக்கும் ஆட்சியின் திட்டங்கள் கிடைக்கச் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.(Online Tamil News)



