இந்தியா தனது குடியரசு நாளைப் பெருமையுடன் கொண்டாடியிருக்கிறது. செங்கோட்டை முதல் சின்னச் சின்னப் பள்ளிக்கூடங்கள் வரை மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. கொடியேற்றுவதும், அணிவகுப்புகள் நடத்துவதும், விருதுகள் வழங்குவதும், தேநீர் விருந்து வைப்பதும் குடியரசு நாளின் சிறப்பு நிகழ்வுகளாக அமைகின்றன. ஆனால், குடியரசு என்பதன் நோக்கம் அவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மைகள் காக்கப்பட வேண்டும் என்பதுதான் குடியரசு நாளின் முக்கிய நோக்கமாகும்.
நம் இந்தியா என்பது இறையான்மைமிக்க மதச்சார்பற்ற சமத்துவ நோக்கம் கொண்ட ஜனநாயகக் குடியரசு நாடாகும். இதன் சிறப்பே பல மொழிகள், இனங்கள், மதங்கள், பண்பாடுகளைக் கொண்ட மக்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மைதான். வேற்றுமையில் ஒற்றுமை என்று இது வலியுறுத்தப்படுகிறது. அதற்கு மாறாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு என்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானப் போக்கையே மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியில் கல்வித்துறை, நிர்வாகத்துறை எனப் பல துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் பிடிப்புள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதனால் பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள் என்கிற பன்மைத்துவத்திற்குப் பதில், இந்து-இந்தி-சமஸ்கிருத வேதம் இவையே இந்தியா என்பதைப் போன்ற தோற்றம் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கொள்கைகளை விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் Anti Indian, urban naxal என்று முத்திரை குத்துவதைப் பா.ஜ.க.வினர் தொடர்ந்து வன்மத்துடன் கடைப்பிடிக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த எண்ணம் நீதித்துறையிலும் சிலரால் வெளிப்படுத்தப்படுகிறது. திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதியரசர், அந்தத் தீர்ப்பை மாநில அரசு நடைமுறைப்படுத்தாததால், பொதுவெளியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதைக் காண முடிகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக எங்கே தீபம் ஏற்றப்படுகிறதோ அதே மரபைக் கடைப்பிடிக்கிறோம் என்கிறது மாநில அரசு. தனி நீதிபதி தீர்ப்பை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வும் தீர்ப்பளித்துள்ள நிலையில், மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடுகிறது. இறுதியில், உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அந்தத் தீர்ப்பே நடைமுறைப்படுத்தப்படும். இந்த சட்ட வாய்ப்புகளை நமது அரசியலமைப்புச் சட்டங்களும், நீதிமன்ற நடைமுறைகளும் வழங்கியுள்ளன.
தீபத்தூண் எனச் சொல்லப்படும் இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதி, அது நிறைவேறவில்லை என்பதால், அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் அதே போன்ற வடிவமைப்பில் தீபம் ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தன்னுடைய நீதிபதி பதவிக்காலம் முடிவடையும்வரை தன் இதயத்தி சனாதன தர்மத்தை ஏந்தி செயல்படுவேன் என்றும் ஒரு நிகழ்வில் உரையாற்றியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியபோது, டெங்கு-மலேரியா ஆகியவை போல ஒழிக்கப்பட வேண்டியது சனாதனம் என்று கூறினார். பா.ஜ.க. தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. உதயநிதியின் தலையை சீவுவேன் என்று வடநாட்டு சாமியார் ஒருவர் சொன்னார்.(Online Tamil News)
உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி கருத்து தெரிவித்த பா.ஜ.க அமித் மாளவியா என்பவர், “இந்து மதத்தின் சனாதனத்தைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை ஒழிப்பதாக உதயநிதி பேசியுள்ளார். இது இனப்படுகொலையைத் தூண்டுவதாகும்” என்றார். பா.ஜ.க. தலைவரின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என காவல்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஒருவர், பா.ஜ.க. தலைவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததுடன், சனாதன ஒழிப்பு என்பது அதைப் பின்பற்றக்கூடியவர்கள் மீதான இனப்படுகொலை அல்லது பன்பாட்டு அழிப்பு என்பதையே குறிக்கும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், நீதிபதியின் விளக்கம் அபத்தமானது என்று கண்டனமும் மறுப்பும் தெரிவித்துள்ளார்.
சனாதனம் என்பது மதமா? இந்து மதத்தில் உள்ளவர்கள் அத்தனை பேரும் சனாதனத்தைக் கடைப்பிடிக்கிறார்களா? அத்தனை பேருக்கும் சமமான நீதியை சனாதனம் ஏற்றத்தாழ்வின்றி வழங்குகிறதா? திராவிடத்தை ஒழிப்போம் என்று பா.ஜ.க.வும் அவர்களின் திடீர் தோஸ்தான சீமானும் பேசுகிறார்களே, அப்படியென்றால் திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றுவர்களைக் கொல்வோம் என்றுதான் அவர்கள் சொல்கிறார்களா?
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் அவரவர் மதம் சார்ந்த கொள்கையைப் பின்பற்றுவதற்கும், ஏற்றத்தாழ்வுகளை விமர்சிப்பதற்கும் உரிமை உண்டு. எல்லாவற்றுக்கும் மேலானது அரசியலமைப்புச் சட்டம். அதன் வழியிலான சட்டநீதிதான் ஆட்சி செய்ய வேண்டும். சனாதன தர்மம் அல்ல.



