சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரை, 34 கோடி ரூபாய் “பிளட் மணி” (இழப்பீட்டுத் தொகை) செலுத்தி கேரள மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீம், கடந்த 2006-ம் ஆண்டு தனது 26-வது வயதில் ஓட்டுநர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். அங்கு ரியாத் நகரில் அப்புதுல்லா என்பவரின் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். காருடன் சேர்த்து, அப்புதுல்லாவின் மாற்றுத்திறனாளி மகனான அனாசி அல்ஷாஹ்ரி என்ற சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அச்சிறுவனுக்கு கழுத்துக்குக் கீழ் உள்ள பகுதிகள் செயல்படாது என்பதால், கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்புக் கருவியின் மூலமே உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2006 டிசம்பர் 24 அன்று, சிறுவனை அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு அப்துல் ரஹீம் அழைத்துச் சென்றபோது எதிர்பாராத விபத்து நிகழ்ந்தது. ரஹீமின் கை தவறுதலாக சிறுவனின் கழுத்தில் இருந்த மருத்துவக் கருவியின் மீது பட்டதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ரஹீமுக்கு, கடந்த 2011-ஆம் ஆண்டு சவுதி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இது கொலை அல்ல, விபத்துதான் என்று சட்டப்போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த 2024-ஆம் ஆண்டு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் 15 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி ரூபாய்) ‘குருதிப் பணம்’ (Blood Money) கொடுத்தால் ரஹீமை மன்னிக்க ஒப்புக்கொண்டனர்.
ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தால் இந்தத் தொகையைத் திரட்ட முடியாது என்பதால், உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் மற்றும் கேரள மக்கள் ஒன்றிணைந்து ‘Crowdfunding’ (பொதுமக்கள் நிதி) மூலம் மிகக் குறுகிய காலத்தில் 34 கோடி ரூபாயைத் திரட்டி சவுதி நீதிமன்றத்தில் செலுத்தினர்.

பணம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. எனினும், அலட்சியமாக இருந்ததற்கான 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முழுமையாக நிறைவு செய்த பிறகு, அப்துல் ரஹீம் தற்போது அதிகாரப்பூர்வமாக விடுதலையாகியுள்ளார். பக்ரீத் பண்டிகை நாளன்று அவர் கேரளா திரும்பியபோது, கோழிக்கோடு விமான நிலையத்தில் உறவினர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.(Online Tamil News)


