மும்பையின் மிகப்பிரபலமான உணவகங்களில் ஒன்றான பாஸ்டியன் (Bastian – At The Top), பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்குச் சொந்தமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தாதரில் உள்ள கோஹினூர் டவரின் 48-வது மாடியில் அமைந்துள்ள இந்த ஆடம்பர உணவகம், நகரின் அழகிய காட்சியை ரசிக்கும்படியான அமைப்பைக் கொண்டது.

சமீபத்தில் இந்த உணவகத்தின் ஒரு நாள் வருமானம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் எழுந்தது. பிரபல எழுத்தாளர் ஷோபா டே, இந்த உணவகத்தின் தாதர் கிளையில் மட்டும் ஒரு இரவில் சுமார் 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், அங்கு தினசரி 1400-க்கும் மேற்பட்டோர் வருவதாகவும், அவர்கள் லம்போர்கினி போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களில் வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தகவல் வைரலானதைத் தொடர்ந்து, பாஸ்டியன் உணவகத்தின் நிறுவனரும் ஷில்பா ஷெட்டியின் தொழில் கூட்டாளியுமான ரஞ்சித் பிந்த்ரா ஒரு நேர்காணலில் இதற்கு விளக்கமளித்தார். ஷோபா டே கூறிய அந்தத் தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், என்றாவது ஒரு நாள் அது நிஜமாகும் என்று நம்புவதாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் ஒரு நாளைக்கு 3 கோடி ரூபாய் வருமானம் என்பது வெறும் வதந்தி என்பதை அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தினார். மேலும், இந்த உணவகம் லாபகரமான நிலையை அடைய சுமார் நான்கு ஆண்டுகள் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

2016-ல் ஒரு சாதாரண வாடிக்கையாளராக இந்த உணவகத்திற்கு வந்த ஷில்பா ஷெட்டி, பின்னர் 2019-ல் இதன் 50 சதவீத பங்குகளை வாங்கி இணை உரிமையாளராக மாறினார். ஆரம்பத்தில் மும்பை வொர்லி பகுதியில் புதிய கிளையைத் தொடங்குவதில் அவருக்குத் தயக்கம் இருந்தபோதிலும், கோவிட் காலத்தில் தொடங்கப்பட்ட அந்த முயற்சிதான் இந்த பிராண்டின் வளர்ச்சியைப் பல மடங்கு உயர்த்தியது. தற்போது இந்த பிராண்டின் கீழ் மொத்தம் 8 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஷில்பா ஷெட்டியின் வருகை இந்தத் தொழிலுக்கு ஒரு பெரிய அடையாளத்தையும், கூடுதல் மதிப்பையும் தேடித்தந்துள்ளதாக ரஞ்சித் பிந்த்ரா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.(Online Tamil News)



