உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வீசி வரும் அதீத சூறாவளிக்காற்று மற்றும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இதில் குறிப்பாக பிரயாக்ராஜ் மாவட்டத்தில் மட்டும் மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் 21 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜைத் தொடர்ந்து கான்பூர், பதேபூர் மற்றும் ஜான்சி போன்ற மாவட்டங்களிலும் அதிகப்படியான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் விழுந்தும் போக்குவரத்து மற்றும் மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. வா னிலை இன்னும் சீரடையாததால், மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.(Online Tamil News)


