இந்தியா கூட்டணியின் தலைமைக்கு மு.க.ஸ்டாலின் தான் சரியான நபர் என்று மணிசங்கர் அய்யரைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவும் குரல் கொடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே ‘இந்தியா’கூட்டணியின் முக்கிய முகமாக இருந்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ‘’இந்தியா கூட்டணி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு மு.க.ஸ்டாலின் தலைமயேற்க வேண்டும்.

கடந்த ஓராண்டிற்கு மேலாக கூட்டாட்சி தத்துவத்திற்காக குரல் எழுப்பி வருகிறார் மு.க.ஸ்டாலின். ராகுலகாந்தி நாட்டின் பிரதமர் ஆகலாம். ராகுல்காந்தி பிரதமர் ஆவது மு.க.ஸ்டாலினும் தடுக்க நினைக்க மாட்டார். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அந்த பணியை மு.க.ஸ்டாலின் சிறப்பாக மேற்கொள்வார்’’ என்று கூறியிருந்தார்.
மணிசங்கர் அய்யரைத் தொடர்ந்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவும் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

‘’பாஜகவின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்றால் இந்தியா கூட்டணிக்கு வலிமையான தலைவர் வேண்டும். இதனால் இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு வலிமையான தலைவரை அறிவிக்க வேண்டும். அந்த வலிமையான தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அவரை இப்போதே அறிவிக்க வேண்டும்’’ என்று உத்தவ் தாக்கரேவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் ’சாம்னா’வில் இன்று வெளியாகி இருக்கும் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மணிசங்கர், உத்தவ் தாக்கரே எழுப்பி இருக்கும் இந்த குரல் இந்தியா கூட்டணியில் ஓங்கி ஒலித்திருக்கிறது.



