கட்சி தொடங்கி மூன்றாண்ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தும் கூட இன்னமும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை கூட நிகழ்த்த விஜய் தயங்குவது ஏன்? கரூர் துயர சம்பவத்தின் போது கூட ஒரு வார்த்தை கூட செய்தியாளர்களிடம் பேசாமல் ஓடிப்போகும் அளவுக்கு செய்தியாளர்களைக் கண்டு அஞ்சுவது ஏன்? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் என்.டி.டிவிக்கு விஜய் பேட்டி அளித்திருப்பதாக தகவல் பரவியது. தமிழ் ஊடகங்களை தவிர்த்து விட்டு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார் என்று விமர்சனம் எழுந்தது. செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து ஒரு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஏன்? என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

கடைசியில் அந்த என்.டி.டிவிக்கு விஜய் பேட்டியே அளிக்கவில்லை என்று அதன் பின்னர்தான் தெரியவந்திருக்கிறது. பேட்டி கேட்டவர்களை நேரில் அழைத்து ஆஃப் தி கேமராவில் உட்கார்ந்து கலந்துரையாடல் நிகழ்த்தி இருக்கிறார் விஜய். அந்த கலந்துரையாடலில் விஜய் சொன்னதைத்தான் என்.டி.வி. ஊடகம் பதிவு செய்திருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதே ஊடகத்திற்கு சென்று பேட்டி அளித்திருக்கும் நிலையில், தவெக தலைவர் மட்டும் ஏன் இப்படி? என்ற விமர்சனங்களுக்கு, தலைவர் பேசாவிட்டால் என்ன? நாங்கள்தான் மீடியாக்கள் முன்பு நின்று பேசுகிறோமே? என்று கேட்கிறார்கள் தவெகவின் நிர்வாகிகள். நேரம் வரும் போது பேசுவார் என்று சொல்கிறார்கள். கரூர் துயர சம்பவத்தை விடவுமா ஒரு நேரம் வரப்போகிறது?



