[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

அன்புமணிக்கே எதிராக திரும்பிய அம்பு!

T.R.Kathiravan
Last updated: 2025-04-10 11:42 am
T.R.Kathiravan T.R.Kathiravan
anbumani ramadoss
anpumani rs

இதுவரையிலும் பாமகவின் நிறுவனராக இருந்து வந்த ராமதாஸ் இன்று முதல் அக்கட்சியின் தலைவராக மாறி இருக்கிறார்.  அன்புமணி ராமதாஸ்   இனி தலைவர் இல்லை; செயல் தலைவர்தான் என்றும் அறிவித்திருக்கிறார்.  இத்தனை காலமும் இல்லாமல் திடீரென்று ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்தது ஏன்?

பாமவின் இளைஞரணி தலைவராக இருந்து வந்த அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதற்காக அவரை கட்சியின் தலைவர் ஆக்கினார் நிறுவனர் ராமதாஸ்.   அதுவரை கட்சி தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணி கவுரவ தலைவர் ஆக்கப்பட்டார்.

தலைவர் பதவியை ஜி.கே.மணி தியாகம் செய்ததால் இளைஞரணி தலைவர் பதவியை அவரது மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு வழங்கினார் ராமதாஸ்.  ஆனால், ‘லைகா புரடக்‌ஷன்ஸ்’ சினிமா தயாரிப்பில் பிஸியாக இருப்பதால் தன்னால் கட்சி பொறுப்பை சரிவர கவனிக்க முடியவில்லை என்று சொல்லி, இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.

இதையடுத்த அந்த பதவி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் இருந்து வந்தது.  கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அன்று புதுச்சேரியில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்,  ‘’பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கிறேன்.  அவர் அன்புமணிக்கு உதவியாக இருப்பார்’’ என்று சொன்னார் ராமதாஸ்.

உடனே இதை எதிர்த்தார் அன்புமணி. ’’எனக்கு உதவி வேண்டாம்.  அவன் கட்சியில சேர்ந்தே நாலு மாசம்தான் ஆகுது.  அவனுக்கு பதவியா?’’ என்று வெடித்தார் அன்புமணி.

அதற்கு ராமதாஸ், ‘’இது என் கட்சி.  நான் சொல்வதைத்தான் கேட்கணும்.  விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறிவிடலாம்’’ என்று ஆத்திரப்பட்டார். இதனால் கடுப்பான அன்புமணி, மைக்கை தூக்கி வீசினார். பின்னர் எழுந்து, தனக்கு பனையூரில் அலுவலகம் உள்ளது என்றும்,  தன்னை இனி தொடர்புகொள்ள விரும்புவோர் அங்கே வரலாமென்றும் அறிவித்தார்.

பொதுக்குழு மேடையிலேயே நடந்த இந்த மோதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.  

இதையடுத்து பாமக உடைகிறது.  ராமதாஸ் – அன்புமணி தலைமையில் பாமக இரண்டு அணியாக இயங்கப்போகிறது, அன்புமணி தனிகட்சி தொடங்கப்போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன.

ஆனால் மறுதினமே தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாசை சந்தித்து பேசினார்.  அப்போது ராமதாஸ் இறுக்கமாக உட்கார்ந்திருந்தார்.  அப்போது கேமராமேன்கள் வளைத்து வளைத்து படம் பிடித்தனர். இதில் கடுப்பான அன்புமணி, ‘’எத்தனையோ போராட்டங்கள் நடத்துகிறோம்.  அதை எல்லாம் கவர் பண்ண மாட்டேங்குறீங்க.  இது நாட்டு மக்களுக்கு அவசியமா? இதுக்கு ஏன் இப்டி போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்புறீங்க?’’ என்று நொந்துகொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,  ‘’பாமக பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம்.  அதில் ஏற்பட்ட விவகாரத்தில் எனக்கும் அன்புமணிக்கும் உண்டானது கருத்து மோதல். அது சரியாகிவிட்டது.  பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் தான்.  பொதுக்குழுவில் அறிவித்து, அதன்படி  நியமனக்கடிதமும் கொடுத்து விட்டேன்.  அதில் இனி எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

ராமதாஸ் -அன்புமணி மோதல் அத்துடன் முடிவுக்கு வந்தது  என்று  நினைத்தால், இன்றைக்கு ’’கட்சி தொடங்கி இதுவரையிலும் நிறுவனராக இருக்கும் நான் தலைவர் பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறேன். அன்புமணி இனி செயல் தலைவராக செயல்படுவார்’’ என்று தடாலடியாக அறிவித்துவிட்டார்.

பொதுக்குழுவினை கூட்டி முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய விசயத்தை தன்னிச்சையாக ராமதாஸ் அறிவித்ததால் கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது. அன்புமணி ஆதரவாளர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அன்புமணியை நீக்கியதற்கு ராமதாஸ் தற்போது காரணங்கள் சொல்லைவிலை என்றாலும் காரணங்கள் இருக்கிறது என்கிறார்.  ‘’அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்கள் உண்டு.  அன்புமணி நீக்கத்துக்கான காரணத்தை சிறுக சிறுக தெரிவிப்பேன்’’ என்கிறார்.  

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த முடிவை எடுத்ததாக ராமதாஸ் தெரிவித்ததால், இந்த விவகாரத்தில் அன்புமணி பொறுமையாக இருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.  ஏன் ஏன்றால், ராமதாஸ் பிடிவாதக்காரர். அவர் தான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார் என்கின்றனர் தைலாபுரம் வட்டத்தினர்.  

மாநில அரசியலில் ஆர்வம் காட்டாமல் டெல்லி அரசியலிலேயே அன்புமணி அதிக ஆர்வம் காட்டி வருவதும் ராமதாசுக்கு அதிருப்தியை தந்திருக்கிறது.  திமுக அணியில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்று ராமதாஸ் ஆலோசிக்க,  மத்திய அமைச்சர் கனவில் தேசிய கட்சியுடன் இணக்கம் காட்டுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார் அன்புமணி.  இதனால்தான் கட்சியில் அதிரடி மாற்றம் கொண்டு வந்திருக்கிறார் ராமதாஸ் என்கிறது தைலாபுரம் வட்டாரம்.

பொதுக்குழுவில் ஏற்பட்ட பிரச்சனையின் போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,  ‘’பாமக ஒரு ஜனநாயக கட்சி.  அங்கே விவாதங்கள் இருக்கத்தான் செய்யும்.  இது உட்கட்சி விவகாரம்’’ என்று சொன்னார்.

பாமகவில் ஜனநாயகம் இருக்கிறது அன்று அவர் பொய்யாக எய்த அம்பு இன்று அவருக்கே எதிராக திரும்பி இருக்கிறது.  தன்னிச்சையாக முடிவெடுத்து ராமதாஸ் அறிவித்ததால், பாமகவில் ஜனநாயகம் இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பாமக நிர்வாகி திலகபாமாவும்,  ‘’பாமகவின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார். அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. ஆனால் இந்த முடிவு தவறு என்கிறார் திலகபாமா.

TAGGED:anbumanianbumaniramadaspmkramdoss
Previous Article Veteran Congress leader Kumari Ananthan dies at the age of 92 தலையங்கம்: தேசிய இயக்கத்தின் தமிழ் முகம்
Next Article anbumani ramadoss removed as pmk president appoints him as executive president தலையங்கம்: அப்பா-மகன் அரசியல்
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account