ஈரானின் கச்சா எண்ணெயை வாங்கினால் கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்ட விவகாரம் மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, அமெரிக்கா ஏற்கனவே அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் ராணுவ நிதியுதவி மற்றும் சட்டவிரோத கச்சா எண்ணெய் விற்பனையைக் குறிவைத்து அமெரிக்கா தற்போது மேலும் புதிய மற்றும் கடுமையான தடைகளை விதித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கும் அல்லது ஈரானின் எரிசக்தி தயாரிப்புகளை வாங்கி வர்த்தகம் செய்யும் எந்தவொரு சர்வதேச நிறுவனம் மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என எச்சரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற 8 நிறுவனங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட 8 கப்பல்களை முடக்கப்பட்ட சொத்துகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட ஈரானிய கச்சா எண்ணெய் பீப்பாய்களைச் சேமித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்ய உதவிய ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு முக்கிய நிறுவனத்திற்கும் அமெரிக்கா அதிரடித் தடை விதித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் ஒருபுறம் நடந்து வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த புதிய பொருளாதாரத் தடை மிரட்டல் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.(Online Tamil News)


