தவெக ஆட்சி அமைத்ததும் முதல்வர் விஜய் மூன்று திட்டங்களை நிறைவேற்றுவதாக முதல் கையெழுத்து போட்டார். அதில் ஒன்று ‘சிங்கப்படை’. இதில் சிங்கப்படையை கொண்டு வர ரொம்பவே போராடுகிறார்கள். சிங்கப்படை தொடக்கவிழா இரண்டு முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
’’வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்- சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் ? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு ? ’’என்று கேட்கும் தினகரன்,
’’சென்னை கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது – குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் ?’’ என்றும் கேள்வி எழுப்புகிறார்.
’’சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன’’ என்று சொல்லும் தினகரன்,
’’தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்’’ என தவெக அரசை வலியுறுத்துகிறார்.



