கேரளாவின் மிக இளம் வயது உறுப்பு தான கொடையாளியான 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் (Aalin Sherin Abraham) நினைவைப் போற்றும் வகையில், கேரள மாநில பொது விநியோகக் கழகம் (சப்ளைகோ – Supplyco) இந்த ஆண்டு தனது புதிய நோட்டு புத்தகங்களை ‘ஆலின்’ (Aalin) என்ற பிராண்ட் பெயரில் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிமுக விழா கொச்சியில் உள்ள எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கேரள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்த புதிய பிராண்ட் நோட்டு புத்தகங்களை வெளியிட்டார்.
பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் – ஷெரின் ஆன் ஜான் தம்பதியரின் 10 மாத பெண் குழந்தைதான் ஆலின் ஷெரின். கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் தனது குடும்பத்தினருடன் காரில் செல்லும்போது ஏற்பட்ட ஒரு கொடூரமான சாலை விபத்தில் ஆலின் பலத்த காயமடைந்தார்.

கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலினுக்கு, பிப்ரவரி 13 அன்று மூளைச் சாவு (Brain Dead) ஏற்பட்டது. மகளின் இழப்பால் தவித்த பெற்றோர், தங்களின் இந்த பெரும் துயரத்திலும் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். ஆலினின் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முன்வந்தனர். இதன் மூலம் கேரள மாநிலத்தின் மிக இளம் வயது உறுப்பு தான கொடையாளி என்ற பெருமையை ஆலின் பெற்றார்.

ஆலினின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் இதய வால்வுகள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோய்வாய்ப்பட்ட ஐந்து குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெறும் நோட்டு புத்தகம் விநியோகம் என்பதையும் தாண்டி, எதிர்கால சந்ததியினரிடம் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தையும் மனிதநேயத்தையும் கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று சப்ளைகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.(Online Tamil News)


