போலியான சமூக வலைத்தள கணக்குகள் மூலம் திமுக குறித்து பொய்செய்திகளை பரப்பும் தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
என்.ஆர். இளங்கோ பேசியபோது, ‘’கோவை சிறுமியின் கொலை குறித்து தாங்கள் பதிவிடுவதின் விளைவுகளை அறியாதவர்கள் அனைவரின் மனதையும் புண்படுத்தும் விதமாகவும், குறிப்பாக திமுகதான் இதற்கு காரணம் என்றும், அரசில் இருப்போர் மீது வெறுப்பு ஏற்படுத்துவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பொய்யான தகவலை பதிவிட்டு, அது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அவதூறு வழக்குகள் தனிப்பட்ட புகாராக கொடுக்கப்பட்டு ஒருவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வேறொருவருடைய அடையாளத்தில் இருந்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பினால் கூட அதற்கு ஆயுள்தண்டனை வரை உண்டு என்று சட்டம் கூறுகிறது.

அடுத்தவர்களை தண்டிப்பது எங்களின் நோக்கம் அல்ல. அதற்காக இப்படியே விட்டுச்சென்றால் இதற்கு ஒரு எல்லை இல்லாமல் போகும். அவதூறுகளுக்கு ஒரு தடை இல்லாமல் போகும் என்பதனால் கழக தலைவர்களின் வழிகாட்டுதலின் படி இன்றைக்கு, குறிப்பாக இந்த நிகழ்வுகள் குறித்து பிஜேபியிடமும் சென்னை ஆணையரிடமும் இரண்டு தனித்தனி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன . அதில் அவர்கள் எந்தெந்த சட்டவிதிகளை மீறியிருக்கிறார்கள் என்பது குறித்து விரிவாக தெரிவித்திருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்செயலாளர் மூலமாக ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள குறைதீர்க்கும் அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக புகார் அளித்திருக்கிறோம். எக்ஸ் தளத்திற்கும், மெட்டா தளத்தில் உள்ள வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களுடைய குறைதீர்க்கும் அலுவலருக்கும் இது குறித்து புகார்கள் அளித்திருக்கிறோம். இது போன்று வரும் பொய்யான செய்திகளை குறைதீர்க்கும் அலுவலகம் நீக்கிவிடவும் புகாரளித்திருக்கிறோம்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். தேவைப்படும் பட்சத்தில் அத்தனை இடத்திலும் தனிப்புகார்கள் அளிப்போம். நாங்கள் புகார் அளித்தால் அதற்கு தீர்வு கிடைக்கும் வரையிலும் விடமாட்டோம்.
இனிமேல் பொய்யான செய்திகளை பரப்புவோருக்கு இது முதலாவதாக நாங்கள் கொடுக்கக்கூடிய எச்சரிக்கை. அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் பதிவிடுங்கள். நாங்கள் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம்.’’
எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான செய்திகளை, அவதூறான செய்திகளை இது போன்று பரப்பிட வேண்டாம். மக்களை திசை திருப்பிட வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.



