ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான சிந்தனைகளும் செயல்களும் மாறுபடக்கூடியவை. முந்தைய தலைமுறையின் பார்வையிலிருந்து இளைய தலைமுறை சிலவற்றில் வேறுபட்டு நிற்கும். நவீனத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இளையோரின் எண்ணப் போக்கு குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தள மெய்நிகர் வாழ்க்கைக்கும், மெய்யான உலக நடப்புக்குமான வேறுபாடுகளை அதிகமாகக் காண முடிகிறது.
தமிழ்நாட்டில் மே 1 என்றால் சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர் ‘தல
’ அஜித் பிறந்தநாள் என்பதாகவே கடந்த 15 ஆண்டுகளாக நிலைப்பெற்றிருக்கிறது. அஜித் நல்ல நடிகர், செல்வாக்கு மிகுந்த நடிகர், நடிப்புக்கு அப்பாற்பட்ட தனித் திறமை கொண்ட நடிகர், ரசிகப் பட்டாளம் கொண்ட நடிகர் என்பவை அவரது சிறப்புகள். அதனால், அவரது பிறந்தநாளை தல நாளாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். உலகம் அதே நாளை உழைப்பாளர் தினமாக-தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறது.
மே1ஆம் நாளில் ஹேப்பி தல பர்த்டே என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போல, ஹேப்பி லேபர் டே என்று பதிவிடுபவர்களும் இருக்கிறார்கள். தொழிலாளர் தினம்-உழைப்பாளர் தினம் என்பது வாழ்த்து பரிமாறுகிற நாள் மட்டுமல்ல, அது உரிமைகளை நினைவுபடுத்தி மீட்டெடுப்பதற்கான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் நாள்.
பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு உலகில் மன்னராட்சிக்கு எதிரான ஆட்சிமுறைகள் உருவாகி, ஜனநாயகம் மேம்படத் தொடங்கிய நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த பார்வைகளும் மேம்பட்டன. கார்ல் மார்க்ஸின் கம்யூனிசத் தத்துவம், தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த அறிவியல்பூர்வமான தீர்வுகளை முன்வைத்தன. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொழிலாளர்களுக்கான இயக்கங்கள் உருவாகின. சிகாகோ நகரில் உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் அதன் காரணமான உயிர்ப்பலிகளும் உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுதான் மே1ஆம் நாள், தொழிலாளர் தினமாக உருவெடுக்க காரணமாக இருந்தது.
சோவியத் ரஷ்யாவில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி, சீனா உள்ளிட்ட நாடுகளில் உருவான கம்யூனிச அரசாங்கங்களின் விளைவாக 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கம்யூனிசக் கொள்கையின் தாக்கம் பெரும்பாலான நாடுகளின் நீடித்தது. அதன் விளைவாக தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் உருவாகின. ஒரு நாளின் 24 மணி நேரமும் உழைப்பு என்ற பெயரால் கசக்கிப் பிழியப்படுவதற்கு மாறாக, 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் அவரவர் விருப்ப வாழ்வு என்ற வேலைக்கட்டமைப்பு உருவானது. இந்தியாவில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்பதை சட்டப்பூர்வமாக்கினார் முதல் சட்ட அமைச்சரும், அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் முன்னின்றவருமான அண்ணல் அம்பேத்கர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்ற பெயர் பெற்ற சிங்காரவேலர், சென்னையில் மே தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினார். அவர் பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதுடன், குடிஅரசு இதழில் முற்போக்கான கட்டுரைகளை எழுதியவர். பெரியாரும் உழைப்பாளர்கள் நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி, தனது இயக்கத்தின் சார்பில் அனைவரையும் கொண்டாடச் செய்தவர்.
தமிழர்கள் தங்களின் அடையாளமாக தை 1ஆம் நாள் பொங்கல் நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், உலக அடையாளமான மே 1ஆம் நாள் தொழிலாளர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அதனை செயல்படுத்தியவர் பெரியார். தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளான தை 1 பொங்கல் நாளும் உழைப்பைப் போற்றுகிற நாள்தான். உள்ளூர் உழைப்பையும் உலகளாவிய உழைப்பையும் உணர்ந்து போற்றிய தலைவர்களாக பெரியார், அண்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.(Online Tamil News)
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மே 1ஆம் நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இது தொழிலாளர்களுக்கு கிடைத்த முக்கியமான உரிமையாகும். மில்லினியத்திற்குப் பிறகு தொழிலாளர் நிலை என்பது மாற்றம் கண்டுள்ளது. பழைய முதலாளி-தொழிலாளி, பண்ணையார்-கூலியாள் என்ற நிலையைக் கடந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் உலகமாக மாறியுள்ள நிலையில், இந்தக் காலத்திற்கேற்றவாறு நிறுவனத்தின் பணியாளர்களுக்கான உரிமைகள், ஊதியம், பணி பாதுகாப்பு ஆகியவை குறித்த புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கும் நாளாக மே 1 அமைய வேண்டும்.
எந்த வகையில் பார்த்தாலும் எல்லா காலத்திற்குமான ‘தல’யாய நாள்தான் மே-1.



