அமெரிக்காவின் ராணுவ தளங்களைத் தாக்குவதற்கு ஈரான் சீனாவிடமிருந்து ரகசியமாக செயற்கைக்கோள் உதவியைப் பெற்றதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ‘எர்த் ஐ’ (Earth Eye Co) நிறுவனம் உருவாக்கிய டி.இ.இ-01பி (TEE-01B) என்ற செயற்கைக்கோளை ஈரான் ரகசியமாக வாங்கி, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு செயற்கைக்கோள் விண்வெளிக்குச் சென்றடைந்த பிறகு அதை மற்றொரு நாட்டிற்கு விற்கும் ‘இன்-ஆர்பிட் டெலிவரி’ முறையில் இந்த ஒப்பந்தம் நடந்துள்ளதால், இதில் சீனாவின் நேரடித் தலையீடு இல்லாதது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் மூலம் சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் மற்றும் ஜோர்டான், ஈராக், குவைத் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் துல்லியமாக நோட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக மார்ச் மாதத்தில் இந்தத் தளம் கண்காணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள் சேதமடைந்ததை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியிருந்தார். இதன் மூலம் ஈரானியப் படைகளுக்குச் சீனா மறைமுகமாக உளவுத் தகவல்களை வழங்கி வருவதாகவும், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்குச் சீனாவின் தொழில்நுட்பம் பெரும் துணையாக இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


