கடந்த 2009-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நோக்கி ‘ஏர்பஸ் ஏ330’ (Airbus A330) என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட ஒரு பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 288 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு காரணமான நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

விபத்து நடந்த சமயத்தில், விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்களில் பனி படிந்து பழுதடைந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் விளக்கம் அளித்திருந்தன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றம் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக தீர்ப்பு அளித்தது.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் கடுமையான கவனக்குறைவால் இந்த மரணங்களை விளைவித்துள்ளதாக நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் உறுதி செய்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யத் தவறியதும், அவசர காலங்களில் அதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து விமானிகளுக்கு முறையான பயிற்சிக் குறைபாடுகள் இருந்ததுமே இந்தத் துயரமான விபத்திற்கு முக்கியக் காரணம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, விபத்தில் உயிரிழந்த 288 பேரின் குடும்பங்களுக்கு தலா 2.51 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 720 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபராதமாகவும் இழப்பீடாகவும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிரான்ஸ் நாட்டின் மிக உயர்மட்ட நீதிமன்றத்தில் (உச்ச நீதிமன்றத்தில்) மேல்முறையீடு செய்யப் போவதாக ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது அறிவித்துள்ளன.(Online Tamil News)


