மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாஸ் மாவட்டத்தின் டோங்க் கலான் (Tonk Kalan) பகுதியில் ஆக்ரா – மும்பை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அனில் மால்வியா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. நேற்று காலை சுமார் 11 மணியளவில், வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த அறையில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது திடீரென ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்புச் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டதுடன், ஆலையின் கூரைகள் மற்றும் சுவர்கள் சுக்குநூறாகத் தகர்ந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக தேவாஸ் மாவட்ட மருத்துவமனை மற்றும் இந்தூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் மற்றும் இயக்குனர் அனில் மால்வியா மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையாளர் அனில் மால்வியா கைது செய்யப்பட்டுள்ளார். ஆலையில் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், உரிமம் பெற்ற நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும் மாவட்ட எஸ்பி (SP) புனீத் கெலாட் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) பாய்ந்துள்ளது.(Online Tamil News)


