அதிமுகவின் பிளவுக்கு இவர்தான் காரணம் என்று பலரும் சொல்லிவர, அவரே அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்க்கு அதிமுக மகளிர் இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கியபோதே, இது தமிழகத்திற்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் பெரும் கேடு விளைவுக்கும் என்று எச்சரித்தார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.
சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆரோடு பயணித்தவர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டிருக்கிற நிலையில் மார்ட்டின் மனைவி லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக்கப்பட்டது எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எடப்பாடி செய்திருக்கிற மாபெரும் துரோகம் என்று சொன்ன கேசிபி,

மார்ட்டின் மனைவி ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் வென்றால் தேர்வாகிற ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் 100 கோடி கொடுக்கக்கூடிய வல்லமை பெற்றவர், ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினருக்கும் 5-10 கோடிக்கு மேல் கொடுத்து ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களையும் தன் பணபலத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கட்சித்தலைமையை கைப்பற்றக்கூடிய பொருளாதார வலிமை பெற்றவர்கள். பாஜக கண் அசைக்கிற நேரத்தில் இந்த அவலம் எதிர்காலத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற எச்சரிக்கையினையும் அவர் விடுத்திருந்தார்.
எம்.ஜி.ஆர், தொண்டர்களால் தலைமை என்று பாதுகாப்பு கவசமாக உருவாகியிருந்த அதிமுக சட்ட விதிகளை உடைத்து எரிந்து தன் பணபலத்தால் தலைமையை கைபற்றியை எடப்பாடி, தெரிந்தும் தெரியாமலே மார்ட்டின் மனைவி லீமாரோஸ் என்கிற விஷ விதையை அதிமுகவுக்குள் விதைத்திருக்கிறார் என்றும் ஆத்திரப்பட்டிருந்தார் கேசி பழனிசாமி.

அவர் சொன்னது மாதிரியே இப்போது அதிமுகவில் நடக்கிறது. ‘சண்முகம் அணி’ என்று அதிமுக பிளவு பட்டிருக்கிறது. இந்த அணியில் முக்கிய முகமாக உள்ளார் லீமா ரோஸ். இதுகுறித்து லீமா ரோஸ், ‘’என்னால் பிளவு ஏற்படவில்லை. அதிமுகவில் பிளவும் இல்லை. ஒன்று சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்துவிடுவோம்’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.



