பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் நீண்டகால உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அவரது மகனான மோஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மோஜ்தபா கமேனி தனது முதல் உரையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் குறிவைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தச் சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் ‘நீதிக்கான வெகுமதி’ (Rewards for Justice) திட்டத்தின் கீழ் மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி தரப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோஜ்தபா கமேனி மட்டுமின்றி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த (IRGC) முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உட்பட மொத்தம் 10 பேரைப் பற்றிய ரகசியத் தகவல்களைத் தருவோருக்கு இந்தச் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்புத் துறை செயலாளர், ராணுவ ஆலோசகர், உள்துறை மற்றும் புலனாய்வுத் துறை அமைச்சர்கள் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டு நடத்தும் ஈரானியப் படையினரை ஒடுக்கும் முயற்சியாக இது எடுக்கப்பட்டுளள்து என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் மோஜ்தபா கமேனியின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன்காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. (Online Tamil News)


