தென் கொரியாவின் மெமரி சிப் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் சங்கம் ஒரு மெகா வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக நீண்ட போராட்டமாகப் பார்க்கப்படும் 18 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த அதன் ஊழியர்கள் சங்கம் திட்டமிட்டிருந்தது.
உலகளவில் மெமரி சிப் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையின் உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்றும், நிறுவனத்தின் ஆண்டு செயல்பாட்டு லாபத்தில் 15 சதவீதத்தை ஊழியர்களுக்கான போனஸ் தொகையாகப் பிரித்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், தங்களின் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது தங்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மெமரி சிப்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ள சூழலில், சாம்சங் நிறுவனத்தின் சிப் தயாரிப்பு பிரிவைச் சேர்ந்த சுமார் 48,000 ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட முயன்றதால் உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உருவானது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.(Online Tamil News)


