அர்ஜென்டினாவிலிருந்து ஸ்பெயினை நோக்கிப் புறப்பட்ட ‘எம்.வி. ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் திடீரென ஹண்டா வைரஸ் தொற்று பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவின் உசுவாயா நகரிலிருந்து சுமார் 147 பயணிகளுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில், நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சிலருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. பரிசோதனையில் அது ஹண்டா வைரஸ் தொற்று என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தொற்றால் இதுவரை மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியினரும் அடங்குவர். மேலும் எட்டு பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, அவர்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக எலிகள் மற்றும் சுண்டெலிகளின் கழிவுகள் மூலம் பரவக்கூடிய இந்த ஹண்டா வைரஸ், மனிதர்களின் நுரையீரலைப் பாதித்து கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. சாதாரணக் காய்ச்சலில் தொடங்கி உயிரிழப்பு வரை கொண்டு செல்லும் அபாயம் கொண்ட இந்த வைரஸ், தற்போது கப்பலில் பரவியிருப்பது சர்வதேச அளவில் மருத்துவ வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கப்பலில் பரவியுள்ளது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ‘ஆண்டிஸ்’ வகை வைரஸாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கப்பல் தற்போது மேற்கு ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள மற்ற பயணிகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்தச் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
மேலும், அடுத்த சில வாரங்களில் மேலும் பரவும் வாய்ப்புள்ளதாக உலகச் சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்..
கப்பலில் பயணித்த 2 இந்திய மாலுமிகளுக்கும் தொற்று கண்டறியப்பட்டது.ஆனால் அவர்கள் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.(Online Tamil News)


