மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த மோதல்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு தொண்டர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு தொண்டர்களும் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

வட 24 பர்கானாஸ் மற்றும் ஹவுரா மாவட்டங்களில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்ட நிலையில், கொல்கத்தாவின் பெலேகட்டா மற்றும் பிர்பூம் மாவட்டத்தின் நானூர் ஆகிய பகுதிகளில் திரிணாமுல் தொண்டர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
இந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றன. பாஜகவினர் திட்டமிட்டு தங்கள் கட்சி அலுவலகங்களைத் தாக்கி வருவதாகவும், டாலிகஞ்ச், கஸ்பா உள்ளிட்ட பல இடங்களில் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதாகவும் திரிணாமுல் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் புல்டோசர்களைப் பயன்படுத்தி கட்சி அலுவலகங்கள் இடிக்கப்பட்டதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வன்முறையைத் தூண்டிவிடுவதாக அக்கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் சூழலைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலக் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வன்முறை தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உள்ளூர் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேலும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.(Online Tamil News)


