மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே நீடித்து வரும் மோதல் போக்கு இன்னும் தணியாத நிலையில், அண்மையில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் மாநிலத்தை மீண்டும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள துரோங்லோபி கிராமத்தில் இரண்டு குழந்தைகள் குண்டுவெடிப்பில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொலையைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூன்று உள்ளூர்வாசிகள் உயிரிழந்தனர். இந்த அடுத்தடுத்த மரணங்களால் ஆத்திரமடைந்த மைதேயி சமூக அமைப்புகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் ஐந்து நாள் தொடர் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தன. இதன் காரணமாக இரண்டாவது நாளாக இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் சூழலை மேலும் சிக்கலாக்கும் வகையில், மாநிலத்தின் மூன்று முக்கிய இனக்குழுக்களும் தனித்தனியாகப் போராட்டங்களை அறிவித்துள்ளன.

நாகா சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சமீபத்தில் கொல்லப்பட்டதைக் கண்டித்து, நாகா அமைப்புகள் நேற்று நள்ளிரவு முதல் மூன்று நாள் முழு அடைப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் முடங்கியுள்ளன. தற்போது இம்பால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், வதந்திகள் பரவாமல் தடுக்க இணையச் சேவைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடி நடத்தியதில் பெண்கள் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவதால் பதற்றம் தணியவில்லை.(Online Tamil News)


