மாற்றம் என்ற போர்வையில் வந்து ஏமாற்றம் தந்து கொண்டிருக்கிறது தவெக. சமூக வலைத்தளங்கள் மூலமாக பல பொய்ச் செய்திகளை மக்கள் நம்பும்படியாக பரப்பிக்கொண்டிருக்கிறது தவெக. ஊடகங்கள் உண்மை நிலையை எடுத்துக்கூறி தவெகவின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி வருகின்றன.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிக இடங்களை தவெக வென்றிருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெறாததால் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறது. அமைச்சரவை அமைப்பதற்கே தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொடர் நெருக்கடிகளுக்கு பின்னர் முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியானது. அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் ஆவதால் அரசு இயந்திரம் பாதிக்கப்படும் என்று பலரும் எச்சரித்து வரும் நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு அவசர ஏற்பாடுகளை செய்து வருகிறது தவெக அரசு.

இந்நிலையில், தவெக அரசு இயந்திரம் இயங்காமல் இருப்பதை மறைப்பதற்காக பல ஆண்டுகளாக இருந்து வரும் திட்டங்களையும், நடைமுறைகளையும் தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடப்பது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி சமாளித்து வருகின்றனர் தவெகவினர்.
தவெகவின் இந்த பொய்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 28 தவெக தலித் வேட்பாளர்கள் பொதுத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றதாக பொய் தகவல் பரவி வரும் நிலையில், ஆனால் அது பொய் என்றும், சங்கராபுரம் பொது தொகுதியில் மட்டும் தவெக சார்பில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டதாகவும், அவரும் கூட தேர்தல் முடிவில் மூன்றாம் இடமே பிடித்துள்ளார் என்றும் தி இந்து நிறுவனம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

தவெக வேட்பாளர்கள் பலரும் ஏழைகள் என்றும், டீ கடை உரிமையாளர் என்றும், ஆட்டோ ஓட்டுநர் என்றும் தகவல் பரவின. அதுவும் பொய். ஆட்டோ ஓட்டுநர் என்று சொல்லப்பட்டவர் ஆட்டோ மொபைல் வைத்துள்ளார். தவெக வேட்பாளர்கள் பலரும் பட்டப்படிப்பும், முனைவர் படிப்பும் படித்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அதுவும் பொய் என்று அந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மூலமே தி இந்து அம்பலப்படுத்தி இருக்கிறது.’

கீர்த்தனா தவெக தொழில்துறை அமைச்சரானதும், தவெக ஆட்சியில்தான் முதன்முறையாக பெண் அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார் என்று தகவல் பரப்புகின்றனர் தவெகவினர். இது அடிப்படை அறமற்றது என்று சொல்லி இதுவரை தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது தி இந்து.

முதல்வர் விஜய் இருக்கையில் வெள்ளை டவல் இல்லை என்பது முதன்முறை இல்லை என்றும், கருணாநிதி, ஜெயலலிதா கால ஆட்சியின் நடைமுறைகள்தான் என்றும் சொல்லி இருக்கிறது தி இந்து.
முதல்வர் அறையில் அமர்ந்து தானே எடுத்து சாப்பிடும் விஜய் படமும் கூட ஏஐ தொழில்நுட்பம் என்று தி இந்து சுட்டிக்காட்டி இருக்கிறது.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பேருந்துகளின் பீதி பொத்தான், 25 ஆண்டுகள் பழையான முதலமைச்சரின் குறைதீர்ப்பு இணையதளம், பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை, சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்களை நிற்க வைக்கக்கூடாது என்பனவற்றை எல்லாம் தவெக ஆட்சியில் அரசாணை போட்டு அமல்படுத்தியது மாதிரி பொய் சொல்வதையும் தி இந்து மற்றும் சப்ராங்க் இந்தியா போன்ற ஊடகங்கள் ஆதாரங்களும் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

நான் முதல்வன் உள்ளிட்ட முந்தைய ஆட்சியின் திட்டங்களையும் தவெக ஆட்சிக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றன ஊடகங்கள்.



