உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லிசாடி கேட் காவல் எல்லைக்குட்பட்ட கித்வாய் நகர் பகுதியில், நேற்று இரவு நிகழ்ந்த ஒரு கோரத் தீ விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இக்பால் அகமது என்பவருக்குச் சொந்தமான மூன்று அடுக்கு மாடி குடியிருப்பில், இரவு சுமார் 8 மணி அளவில் திடீரென தீப்பிடித்ததுள்ளது. வீட்டின் தரைத்தளத்தில் தையல் வேலைப்பாடுகளுக்காக அதிகப்படியான துணிகள் மற்றும் ஆடைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மின் கசிவு காரணமாக தரைத்தளத்தில் உருவான தீ, அங்கிருந்த துணிகள் மூலம் மிக வேகமாக மேல் தளங்களுக்குப் பரவியுள்ளது. இதனையடுத்து, சில நிமிடங்களிலேயே வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், உள்ளே இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போனது.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், இக்பால் அகமது வெளியில் சென்றிருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் அவரது மருமகள் ருக்ஷார் (25) மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். தீ மளமளவென பரவியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், அந்தப் பகுதி மிகவும் குறுகிய சந்துகளைக் கொண்டிருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டன. இதனால் மீட்புப் பணிகள் தாமதமான நிலையில், உள்ளூர் மக்கள் ஏணிகள் மூலமாகவும், ஜன்னல்களை உடைத்தும் உள்ளே இருந்தவர்களை மீட்கப் போராடினர். சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. (Online Tamil News)
துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் ருக்ஷார் மற்றும் ஐந்து சிறுவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 12 வயதான மெஹ்பிஷ், 4 வயதான சிறுவர்கள் ஹம்மாத் மற்றும் அக்தாஸ், மற்றும் வெறும் 4 மாதங்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளான நபியா மற்றும் இனாயத் ஆகியோர் அடங்குவர். தூக்கத்தில் இருந்த குழந்தைகளால் புகையின் நெடியைத் தாங்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், பின்னர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 55 வயதான அமீர் பானோ என்ற முதியவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். மின் கசிவுதான் விபத்திற்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறுகிய குடியிருப்புப் பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி ஆடைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


