இந்திய நாடாளுமன்றத்திற்கோ மாநில சட்டமன்றங்களுக்கோ தேர்தலை தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும். மார்ச் 15ந் தேதி மாலை 4 மணியளவில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநிலத் தேர்தல்களுக்கானத் தேதியை அறிவித்ததும், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
இனி தேர்தல் முடிவுகள் வெளியாகி, மீண்டும் ஆட்சியமையும் வரை, அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது. முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது. அவர்களின் கார்களில் உள்ள தேசியக் கொடிகள் அகற்றப்பட்டு, கட்சிக் கொடிகள் பறக்கும். அரசு அலுவலகங்களிலும் மற்ற இடங்களிலும் உள்ள முதலமைச்சரின் படங்கள் அகற்றப்படும். இவையெல்லாம் நடைமுறையானவை. எனினும், அவையும்கூட சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் பசியுடன் இருப்பவர்களுக்குத் தீனியாக மாறுவதைக் காண முடிகிறது.
சுவர்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் விளம்பரங்களின் மீதும் வெள்ளையடிக்கப்படுவதும், சாலைகளில் உள்ள பேனர்கள் அகற்றப்படுவதும் உள்ளாட்சி நிர்வாக ஊழியர்களின் பெரும் வேலை. இதில் மிகவும் ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருப்பது, தலைவர்களின் சிலைகள் மீது துணியை சுற்றி வைப்பது அல்லது கோணிசாக்கு போட்டு மூடி வைப்பதாகும். வாழ்ந்து மறைந்த தலைவர்களின் பொதுநலப் பங்களிப்புக்காகவும், அவர்களின் தியாகங்களுக்காகவும், அவர்களின் கருத்துகளுக்காகவும் சிலைகள் வைத்து மரியாதை செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் உள்ளது. தேர்தல் நேரத்தில் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் சிலைகளை துணியை சுற்றி மூடி வைக்கவேண்டிய அவசியம் என்ன? மறைந்த தலைவர்கள் எந்தக் கட்சிகளை சார்ந்தவர்களோ அந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டு விடும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.
காமராஜர் இருந்த காங்கிரஸ் கட்சியா இப்போது இருக்கிறது? அவர் வாழ்ந்த காலத்திலேயே ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று பிரிந்துவிட்டது. அதன்பிறகு எத்தனையோ பிரிவுகள். இப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. கூட்டணிக்கே போய்விட்டது. அந்தக் கட்சியினர் காமராஜர் சிலையைப் பார்த்தால் எந்த சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்? காமராஜர் காலத்து இராட்டை சின்னமே இப்போது இல்லை. அதே போலத்தான் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டவர்களின் சிலைகளைப் பார்த்து அவரவர் கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்பதும் தேர்தல் ஆணையத்தின் மூடநம்பிக்கைதான்.
வாழ்ந்து மறைந்து மக்களின் மனங்களில் இடம்பெற்றிருக்கும் தலைவர்களின் சிலைகள் மீது துணியை சுற்றியும், கோணிசாக்கால் மூடியும் அவர்களின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் ஒரு சேர வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது கட்சிகளின் சார்பிலான கோரிக்கை என்றால், பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி வைக்கப்படுகின்றன.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிறைய பரிசுகளை வழங்குவது வழக்கம். அத்துடன், ரொக்கப் பணமாகவும் தரப்படும். இவற்றைத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. வாக்குகள் விலைக்கு போகக்கூடாது என்பது மிக முக்கியமானது. அதுபோலவே, அரசியலுக்கு அப்பாற்பட்ட வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமானதாகும்.(Online Tamil News)
தெருத்தெருவாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் காவல்துறையினர் நடத்தும் சோதனையில் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் வழக்குப் போடப்படுகிறது. அதற்கு குறைவான தொகையாக இருந்தாலும், எதற்காக இந்தப் பணம், எங்கே எடுத்துப் போகிறீர்கள் என்று கேள்விகள் கேட்டு எளிய மக்களைத் துவைத்து எடுக்கிறார்கள். ஒரு பவுன் தங்கம் ஒரு இலட்சத்துக்கு மேல் விற்பனையாகிற காலத்தில் இருபதாயிரம், முப்பதாயிரம் ரூபாய்க்கு விலாவாரியாக கணக்கு கேட்டு பொதுமக்களையும் வணிகர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக புகார்கள் வெளிப்படுகின்றன.
இது பங்குனி மாதம். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் அதிகம் நடக்கக்கூடிய மாதம். மண்டப வாடகை, விருந்து செலவு, பட்டுப்புடவை, நகை ஆகியவற்றுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். திருமண ஆர்டர்களான வெள்ளி பாத்திரம், நகை ஆகியவற்றை வணிகர்கள் கொண்டு போய் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கான எளிய நடைமுறையை உருவாக்காமல், தேர்தல் நேரக் கெடுபிடியாக பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை தலைமைத் தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.



