அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கிண்டலடித்துப் பேசும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் வீடியோவின் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பதாகவும், அண்ணாமலை இருப்பதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இதற்காக பெருந்தொகை ஒன்றும் முன்பணமாக பெற்றிருந்தார். அவரை தேர்தல் வேலைகளைச் செய்ய பழனிசாமியும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அவரோ கூட்டணி வேலைகளைச் செய்யத் தொடங்கியதும் கடுப்பான பழனிசாமி, உங்கள் சேவை அதிமுகவுக்கு தேவையில்லை என்று சொல்லி ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார். கொடுத்த முன் பணத்தையும் திரும்பி பிடுங்கிக்கொண்டார்.

இதையடுத்து தனது சீடர் ஆதவ் அர்ஜுனாவின் மூலம் தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசினார் பிரசாந்த் கிஷோர். தனது சீடர்கள் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா இருவரும் அங்கே இருப்பதால் தான் தவெகவுக்கு பணியாற்றும் எண்ணம் இல்லை என்று சொல்லி, சில ஆலோசனைகளை மட்டும் சொல்லி விஜய்யை குழப்பிவிட்டுச் சென்றார்.
அதுவரையிலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்த விஜய்யிடம், உங்களுக்கு இருக்கும் செல்வாக்கு உங்களுக்கே தெரியவில்லை. தனித்து நின்று பாருங்கள். நீங்கள்தான் முதல்வர் என்று உசுப்பேத்திவிட்டுச் சென்றார். அதை விஜய் முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் அவர் இப்போதும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தில் உள்ளார்.
சீட் மட்டுமல்லாது ஆட்சியில் அதிகாரத்தில் விஜய் பங்கு கேட்டதால்தான் பழனிசாமியும் கடுப்பாகி பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார். அவருக்கும் விஜய்யை கூட்டணியில் சேர்த்துவிடலாம். பாஜகவை கழற்றிவிட்டாவது தவெகவுடன் சேர்ந்துவிடலாம் என்ற எண்ணம் உள்ளது என்கிறார்கள்.

இதனால் மீண்டும் அதிமுக – தவெக பேச்சுவார்த்தை துவங்கும் என்கிற நிலையில்தான் பழனிசாமியையும் அதிமுகவையும் இழித்தும் பழித்தும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேசும் வீடியோ வெளியாகி அதிமுகவினரை ஆத்திரப்பட வைத்தது.
இந்த வீடியோ ஒரு சித்தரிப்பு என்று சமாளிக்காமல் அது உண்மைதானென்றும் அதற்கு மன்னிப்பு கேட்டும் உள்ளார் ஆதவ் அர்ஜூனா.
இது குறித்து அவரது நீண்ட விளக்கத்தில், ‘’எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ வெளியானது உண்மை என்றும் அதில் தான் பேசியது உண்மை என்றும் ஒப்புக்கொண்டிருக்கும் ஆதவ், அத்தனை நெருக்கத்தில் இருந்து எடுத்து யார் வெளியிட்டது என்று சொல்லவில்லை. அவரே எடுத்து வெளியிட்டதாகத்தான் செய்தி பரவுகிறது.
அதிமுகவும் தவெகவும் இணைய வேண்டும் என்று சொன்னபோது கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். அந்த வேலை உங்களுக்கு ஏன்? என்று முகத்தில் அறைந்தார் போல் சொல்லி வெளியேற்றிய பழனிசாமியின் மீதுள்ள ஆத்திரத்தால் அதிமுகவும் தவெகவும் இணையக்கூடாது என்பதற்காக, ஆதவ் அர்ஜூனாவிடம் சொல்லி, தவெகவுடன் கூட்டணி அமைப்பதை பழனிசாமி கனவிலும் நினைத்துப் பார்க்கூடாது என்பதற்காக இப்படி பேசி வீடியோ எடுத்து வெளியிடச் சொன்னதாக ஒரு செய்தி பரவுகிறது.
அதிமுக குறித்தும், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் குறித்தும் அவதூறு சொல்லி பேசி வந்த அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து, அண்ணாமலையை வெளியேற்றிய அடுத்த நொடியே பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் பழனிசாமியின் மீது ஏக ஆத்திரத்தில் இருக்கிறார் அண்ணாமலை. அவர்தான் அதிமுக – தவெக கூட்டணி அமைந்து வெற்றிக்கூட்டணி ஆகக்கூடாது என்கிற கணக்கில் ஆதவ் அர்ஜூனா மூலம் இந்த வேலையைச் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் பழனிசாமி இணைய ஆலோசித்து வருகிறார் என்று வரும் தகவல்களில் அதிர்ச்சி அடைந்த பாஜக தலைமை, ஆதவ் அர்ஜூனா மூலம் இப்படி ஒரு திருவிளையாடலை நடத்தி இருக்கிறது என்கிறார்கள்.
யார் சொல்லி இந்த திருவிளையாடல் நடந்ததோ? திருவிளையாடலை நிகழ்த்தியவர் மட்டும் ஆதவ் அர்ஜூனாவேதான். அவரே அந்த வீடியோவின் நடிகர்/ இயக்குநர். வெளியீட்டாளரும் கூட அவரேதான் என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள்.