மகாபாரதக் கதையில் திருதராஷ்ட்ரன் ஆலிங்கனம் என்ற சொல் உண்டு. கௌரவர்களில் மூத்தவரான துரியோதனின் தம்பிகளின் ஒருவர் திருதராஷ்ட்ரன். அவருடைய இயல்பு, நண்பர் போல கட்டித் தழுவி, இறுக்கி நெரித்து அவர்கள் கதையை முடித்துவிடுவார். பாரதக் கதையில் அதற்குப் பெயர் திருதராஷ்ட்ர ஆலிங்கனம். அரசியலில் நட்பு காட்டுவது போல அரவணைத்து, அப்படியே கழுத்தை நெரிப்பதை, திருதராஷ்ட்ர ஆலிங்கனம் என்கிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள (ADMK) அ.தி.மு.க நிலை அப்படித்தான் உள்ளது.
கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போனவர்களை சேர்க்கவே முடியாது என்று உறுதியாகச் சொல்லி வந்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவர் குறிப்பிட்டுச் சொன்னது சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத்தான். அவர்களோ, அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று குற்றம் சாட்டி வந்தார்கள். இந்நிலையில்தான், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் அ.மு.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இணைந்திருக்கிறார். (BJP) பா.ஜ.க.வின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தினகரன் கட்சி கூட்டணியில் இணைந்தது.
தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறேன்’‘ என்று வார்த்தைகளை கவனமாகச் சொன்னார் தினகரன். இந்திய அளவில் பா.ஜ.க. கூட்டணிக்குப் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி. 1999 முதல் இந்தப் பெயரில்தான் அந்தக் கூட்டணி இயங்கி வருகிறது. பா.ஜ.க.வைத் தவிர மற்ற கட்சிகள், கூட்டணிக்குள் வரும் போகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.தான், மாநில அளவில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி என்று அமித்ஷா தொடங்கி நயினார் நாகேந்திரன் வரை பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் சொல்லி வந்தனர்.
தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியான அ.தி.மு.க இல்லாமலேயே தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அ.மு.மு.கவைக் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது பா.ஜ.க. திருதராஷ்ட்ர ஆலிங்கனத்தின் ஒரு பகுதி இது. அதாவது, “மாப்பிள்ளை இவர்தான். ஆனா இவர் போட்டிருக்கறி சட்டை என்னோடது” என்கிற படையப்பா படத்தின் காமெடி போல, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது அ.தி.மு.க.தான். ஆனால், தினகரனை நாங்களே முன்னின்று சேர்த்துக் கொண்டோம் என்பதுபோல செயல்பட்டுள்ளது பா.ஜ.க.
இன்றைய நிலையில், பா.ஜ.க.வின் உத்தரவுகளை மீறி செயல்படக்கூடிய நிலையில், அ.தி.மு.க. இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோதே, அ.தி.மு.க. மீதான பா.ஜ.க.வின் திருதராஷ்ட்ர ஆலிங்கனம் ஆரம்பமாகிவிட்டது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அடுத்தடுத்து முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தவர்களையும் அரவணைப்பது போலக் காட்டி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போதே தலைமைச் செயலகத்தில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் உள்ளே நுழைந்து சோதனை நடத்தின. அ.தி.மு.க. அமைச்சர்கள், உறவினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அ.தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டு, அ.ம.மு.க. என்ற கட்சியைத் தொடங்கிய தினகரனையும் பா.ஜ.க. விட்டு வைக்கவில்லை. அவர் மீதான மோசடி வழக்கின் அடிப்படையில் டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
அ.தி.மு.க.வின் அனைத்து தரப்புமே பா.ஜ.க.வின் திருதராஷ்ட்ர ஆலிங்கனம் எனும் இறுக்கமான பிடிக்குள் வந்துவிட்டன. டெல்லியிலிருந்து அழைப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமியும் அவசரமாக ஓடுகிறார். அங்கே கார் மாறி, மாறி சென்று அமித்ஷாவை சந்திக்கிறார். மீடியாக்களிடம் முகம் காட்டாமல் கர்சீப்பால் மறைத்துக்கொள்கிறார். டி.டி.வி. தினகரனும் டெல்லி அழைத்தால் அவசரமாக ஓடுகிறார். மேலிடம் சொன்னவுடன் கூட்டணியில் சேர்ந்து விடுகிறார். மற்றவர்களின் நிலையும் இதுதான்.
பா.ஜ.க. எந்தெந்த மாநிலத்தில் இதுபோல கூட்டணி அமைத்ததோ அந்தக் கட்சிகளையெல்லாம் தனது திருதராஷ்ட்ர ஆலிங்கனத்தால் காலி செய்திருக்கிறது. இந்துத்வா கொள்கை கொண்ட சகோதர கட்சியான மகாராஷ்ட்ராவின் சிவசேனாவில் தொடங்கி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க வரை இதுதான் பா.ஜ.க.வின் அரசியல் ஃபார்முலாகவாக உள்ளது. இதுவரை சொந்தக்காலில் தமிழ்நாட்டில் எந்த வெற்றியும் பெற முடியாத பா.ஜ.க,வின் தலைமை, அ.தி.மு.க.வை ஆலிங்கனம் செய்து, அந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ளும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தன்னை பா.ஜ.க. அரவணைப்பதே அழிப்பதற்காகத்தான் என்பதை அறிந்தும் அறியாதது போல பிடிக்குள் இறுகி, கதறக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.



