மொழி ஒன்று, நிலம் இரண்டு. ஒரே மொழி பேசுபவர்களைக் கடல் பிரிப்பதால் இரண்டு நாடுகளின் குடிமக்களாயினர். அவர்கள்தான் இந்தியத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும்.
1980களில் தொடங்கி 1990களின் பிற்பகுதி வரை இலங்கையில் சிங்கள இனவாத அரசுகளால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை எதிர்த்தும், உரிமை கோரியும் தமிழர் அமைப்புகள் நடத்திய ஆயுதப் போராட்டங்களால் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பாதிப்புக்குள்ளான இலட்சக்கணக்கான மக்கள் படகுகளில் தங்கள் உயிரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் மிகப்பெரிய இன அழிப்பு நடந்து முடிந்தது. தமிழர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தியாவுக்கு வந்த இலங்கைத் தமிழர்கள் உயிர் இருந்தும் உரிமை இல்லாத நடைப்பிண வாழ்க்கைக்குள்ளாயினர்.
இலங்கையிலிருந்து (Sri Lanka )வந்த தமிழர்கள் இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களுக்குத் அனுப்பி வைக்கப்பட்டனர். 1983 முதல் 2009 வரை இலங்கையிலிருந்து வந்தவர்களில் பலர் ஒவ்வொரு கட்டத்திலும் திரும்பிச் சென்ற நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 103 முகாம்களிலும், வெளியிடங்களிலுமாக ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் இருக்கிறார்கள். குழந்தைகள், முதியோர் தவிர்த்து, முறையான பதிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 89ஆயிரம் என்கிறது அரசுத் தரப்பு புள்ளிவிவரம்.
இவர்களில் பலர் 35 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு திருமணம், குழந்தை பிறப்பு எல்லாம் இந்த நாட்டில்தான். ஆனால், அவர்களின் பூர்வீகமான இலங்கையிலும் குடியுரிமை கிடையாது. வாழ்கின்ற இந்தியாவிலும் அவர்களுக்குக் குடியுரிமை கிடையாது. தமிழ் வழிச் சொந்தங்கள், தொப்புள் கொடி உறவுகள் என்று உணர்வுப்பூர்வமாக சொன்னாலும், அந்த உணர்வை அரசியலாக்கி உலக நாடுகளில் உண்டியல் குலுக்கி கட்சிகள் நடத்தினாலும், இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி இங்கே வாழும் இலங்கைத் தமிழர்கள், சட்ட விரோதக் குடியேறிகளாகவே கருதப்படுகின்றனர்.
தகரக் கொட்டகையால் ஆன வீடு, கேம்ப் மக்கள் என்ற பேரு, பொது சமூகத்துடன் கலந்து வாழ முடியாத தனிமை, குடியுரிமையற்ற வாழ்க்கை என பல ஆண்டுகளாகத் தவித்து வந்த இவர்களின் நலனில் அக்கறை செலுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களை, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம் செய்தார். அத்துடன், அவர்களின் மறுவாழ்வுக்கான 300 கோடி ரூபாய் மதிப்பிலானத் திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்துவதற்காக ஓர் ஆலோசனைக் குழுவையும் அமைத்தார்.
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் உடனடித் தேவையாக முழுமையான கான்க்ரீட் வீடுகள், மாதந்தோறும் பணக்கொடை, கல்வி உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களான நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றுடன் தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்தும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்திடச் செய்தார். அன்றாட வாழ்க்கையில் ஒளி ஏற்றப்பட்டது. எனினும், தொலைநோக்குப் பார்வையுடனான நீண்டகாலத் தீர்வு என்பது அவர்களுக்கான குடியுரிமைதான்.
மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்தியா வரும் இந்துக்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால், இலங்கையைச் சேர்ந்த இந்துக்களான தமிழர்களை இந்தப் பட்டியலில் பா.ஜ.க அரசு சேர்க்கவில்லை. திட்டமிட்டு தவிர்த்துவிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் பலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு தோட்ட வேலையாகச் சென்றவர்களின் வாரிசுகள். அவர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள ஒப்பந்தங்களும் உள்ளன. அத்துடன், கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்டரீதியாக குடியுரிமை வழங்குவதற்கான உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் முன்னுதாரணங்களாக உள்ளன.
தமிழ்நாடு அரசு அமைத்த இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவன் சார்பில் நீண்டகாலத் தீர்வுக்கான இடைக்கால அறிக்கை 2023 செப்டம்பர் மாத இறுதியில் முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், குடியுரிமை பெறுவதற்கான சான்றுகள், ஆவணங்கள், சட்டவிதிமுறைகள் குறித்து கலெக்டர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிடவும், சட்டச்சிக்கல் இல்லாமல் இங்கேயே தங்கியிருக்க நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.(Online Tamil News)
நாடற்றோர், நாதியற்றோர் என்ற நிலை மாறி, இந்தியக் குடியுரிமைப் பெற்ற தமிழ்நாட்டவர் என்ற காலம் இலங்கைத் தமிழர்களுக்கு விரைவாக கனியுமா?


