அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தும், பல்லாயிரம் பேர் உடைமைகளை இழந்தும் தவிக்கின்ற நிலையில், யுத்தம் நடக்கும் இடத்துடன் எந்தத் தொடர்புமில்லாத இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பரிதவிப்பு என்பது வித்தியாசமானது. போர் நடக்கும் நாடுகளில் தங்களின் உறவினர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற பரிதவிப்பு இயல்பானது. அந்த பரிதவிப்பைவிட, தங்கள் வீட்டிற்கு சமையல் சிலிண்டர் தட்டுப்பாடின்றி சப்ளை செய்யப்படுமா என்ற பதற்றமே நாடு முழுவதும் உள்ளது.
பெட்ரோலியம் பொருட்களில் ஒன்றுதான் எல்.பி.ஜி எனப்படும் சமையல் கேஸ் ஆகும். பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியில் ஈரான் நாட்டின் பங்கு உலகளவில் முக்கியமானது. அந்நாட்டின் பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் மூலம் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உள்ளிட்டவை அதிகளவில் உற்பத்தியாகின்றன. உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. ஈரானின் எண்ணெய் வளம்தான் அமெரிக்காவின் கண்களை உறுத்துகிறது. முஸ்லிம் நாடான ஈரானும் யூத நாடான இஸ்ரேலும் பழைய பகைமையில் உள்ள நிலையில், வல்லரசு நாடு என்ற பெயரில் அமெரிக்கா உள்ளே நுழைந்து, ஈரானின் வளங்களைத் தன் வசப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சியே இந்த யுத்தமாகும். நீ அடிக்கிறதை நிறுத்தாவிட்டால் நானும் நிறுத்தமாட்டேன் என வரிந்து கட்டி யுத்தக் களத்தில் நிற்கிறது ஈரான்.
ஈரானின் ஹார்முஸ் நீரிணைப்புதான் கேஸ் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் பிற நாடுகளுக்கு செல்வதற்கான முக்கிய பாதை. போர்ச்சூழல் ஏற்பட்டதும் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் தடை விதித்ததால் பெட்ரோலியப் பொருட்கள் சப்ளை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் உலகின் பல நாடுகளும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சூழலில் உள்ளன. இந்தியாவிலும் இந்தப் பதற்றம் அதிகமாக இருக்கிறது.
வடமாநிலங்களில் விவசாயி ஒருவர் தன்னுடைய டிராக்டரில் பெட்ரோல் பங்கிற்கு வந்து பிளாஸ்டிக் வாட்டர் டேங்க்குகளில் டீசலை நிரப்பிய காட்சி சில நாட்களுக்கு முன் வைரலானது. பல ஊர்களிலும் பெட்ரோல் பங்க் முன்பாக டூவீலர்களும் கார்களும் வரிசை கட்டி நிற்கத் தொடங்கின. பெட்ரோல், டீசல் இவற்றைத் தொடர்ந்து சமையல் கேஸ் கிடைக்குமா என்ற பதற்றமும் அதிகமானது.
ஹோட்டல் உள்ளிட்ட வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, ஈரான்-அமெரிக்கா யுத்தத்தைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்தியது. விலை உயரும்போதே தட்டுப்பாடு அதிகரிக்கும் என்கிற மனநிலை மக்களுக்கு இருப்பதால் சமையல் கேஸ் சிலிண்டரை தங்கள் ஏஜென்சிகளிடம் பதிவு செய்வதற்கு முண்டியடித்தனர். இரண்டு சிலிண்டர்கள் உள்ள வீடுகளில் கூட, அவசர அவசரமாக புக்கிங் செய்தனர். நாளொன்றுக்கு சராசரியாக 200 சிலிண்டர்களுக்கு புக்கிங் நடக்கும் ஏஜென்சிகளில் 2000 சிலிண்டர்கள் வரை புக்கிங் கால்கள் வந்ததால், தற்போது பல ஏஜென்சிகள் புக்கிங் செய்வதையே நிறுத்திவிட்டன. இது மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் நிலையும் தட்டுப்பாடாக இருப்பதால், ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஹோட்டல் குழுமமான அன்னபூர்ணா-கௌரிசங்கர் குழுமத்தினர் தங்கள் ஹோட்டல்களில் குறிப்பிட்ட சில மெனுக்களே தயாராகின்றன. அதுவும் முக்கியமான-அத்தியாவசியமான உணவு வகைகள்தான் என அறிவிப்பே வெளியிட்டுவிட்டது. மெஸ், விடுதிகள் போன்ற இடங்களிலும் கேஸ் தட்டுப்பாட்டால் உணவு வகைகளில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. சிறிய உணவகங்கள் கேஸ் சிலிண்டருக்கு பதில் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் காட்சிகள் வெளியாகின்றன.
நடைமுறையில் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறுவது என்பது சாத்தியமில்லாதது. அது உடல்நலனுக்கு சரியானதுமல்ல. இன்டக் ஷன் ஸ்டவ் போன்ற மின் அடுப்புகள் ஓரளவு பயன்பாட்டில் இருந்தாலும், எளிய-நடுத்தர மக்களில் பெரும்பாலானவர்களின் பயன்பாட்டுக்குரியதாக இருப்பது சமையல் கேஸ்தான். முறையாகப் பதிவு செய்து, விண்ணப்பித்து, சீரான முறையில் விநியோகம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க வேண்டிய வகையில் சிலிண்டருக்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய பா.ஜ.க அரசு செய்தாக வேண்டும்.
வெங்காயம், பூண்டு விலை ஏறியபோது அது குறித்த கேள்விக்கு, “நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இப்போது சமையல் கேஸ் தட்டுப்பாட்டு நேரத்தில், எதற்காக கேஸ் சிலிண்டர், மின் அடுப்பு பயன்படுத்துங்க என்றும் விறகு அடுப்பு சமையல் எப்படி இருக்கும் தெரியுமா என்றும் அட்வைஸ்களைத் தூக்கிக் கொண்டு வரும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் யுத்தக்களத்து வெடிகுண்டுகளைவிட ஆபத்தானவர்கள்.(Online Tamil News)



