மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜே. ஜெயலலிதாவிற்குச் சொந்தமான ஹைதராபாத் இல்லம், பல ஆண்டுகளாகச் சொத்து வரி செலுத்தப்படாத காரணத்திற்காக மாநகராட்சி அதிகாரிகளால் அதிரடியாகச் சீல் வைக்கப்பட்டது. ஹைதராபாத்தின் ஸ்ரீநகர் காலனி (Srinagar Colony) பகுதியில் அமைந்துள்ள இந்த நான்கு மாடி (G+4) கட்டிடம், 2017-ஆம் ஆண்டு முதல் வரி பாக்கி வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தக் கட்டிடத்திற்கு 2017-ஆம் ஆண்டு முதல் முறையாகச் சொத்து வரி செலுத்தப்படவில்லை. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) சார்பில் அதன் வாரிசுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், அந்த நோட்டீஸிற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாத நிலையில், மார்ச் 30-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் அந்த இல்லத்திற்குச் சீல் வைத்தனர். ஒருமுறை தீர்வு திட்டத்தின் (OTS) கீழ் வழங்கப்படும் சலுகைகளுக்குப் பிறகும், சுமார் ₹82.91 லட்சம் வரி நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு சில தகவல்களின்படி, அபராத வட்டியுடன் சேர்த்து இந்தத் தொகை ₹1.5 கோடி வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த இல்லம் முன்பு வணிக ரீதியான பயன்பாட்டில் இருந்ததால் அதிக வரி விதிக்கப்பட்டதாகவும், ஆனால் 2017 முதல் இது குடியிருப்புப் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டதால் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜே. தீபக் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். வரி வகைப்பாட்டை மாற்றுவது தொடர்பான இந்த முறையீடு நிலுவையில் இருந்ததாலேயே வரி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

மாநகராட்சி எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, கட்டிடப் பராமரிப்பாளர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் தரப்பில் நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும், இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், சீல் வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டிடத்தைத் திறந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சென்னையில் உள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ மற்றும் ஹைதராபாத் திராட்சை தோட்டம் ஆகியவை வருமான வரித் துறையினால் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு இல்லம் சொத்து வரிப் பிரச்சினைக்காகச் சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


