அன்புமணி, ஜி.கே.வாசனைப்போல் பிரேமலதா விஜயகாந்தும் முதுகில் குத்திவிட்டால் என்னாவது? என்ற சந்தேகத்தில் இப்போது தரவேண்டிய ராஜ்யசபா சீட்டினை 2026இல் தருவதாக இபிஎஸ் சொல்ல, அதிமுக முதுகில் குத்திவிட்டதாக தேமுதிக வெடித்திருக்கிறது.
அன்புமணி, ஜி.கே.வாசன் இருவருக்கும் ராஜ்யசபா சீட் கொடுத்தார் இபிஎஸ். ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியபோது சீட் கொடுத்த அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாமல் பாஜகவின் சார்பு நிலையினையே எடுத்தார்கள்.

இதனால் தேமுதிகவுக்கு சீட் கொடுத்தால் இக்கட்சியும் 2026 சட்டமன்ற தேர்தலின் போது அன்புமணி, ஜி.கே.வாசன் போன்று நன்றி விசுவாசம் இல்லாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் 2026ல் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார் இபிஎஸ்.
2024 தேர்தலின் போது 5 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவை சீட் தருகிறோம் என்று அதிமுக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை இப்போது அதிமுக நிறைவேற்ற வேண்டும். ஆனால், 2024 மக்களவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை 2026இல் நிறைவேற்றுவதாக கூறி இருக்கிறது அதிமுக.

இபிஎஸ்சின் இந்த முடிவால் அவரது தொடர் அரசியல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இபிஎஸ் என்றாலே துரோகம் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. சசிகலா, ஓபிஎஸ்க்கு செய்த துரோக அரசியலால் ‘துரோகி’ பட்டத்தை சுமந்து கொண்டிருக்கிறார். இப்போது தேமுதிகவுக்கு துரோகம் செய்திருக்கிறார். இதனால் இபிஎஸ்சின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.
அதனால்தான் தங்களை நம்பாத இபிஎஸ்சை பிரேமலதா விஜயகாந்தும் நம்பவில்லை. முன்பு கொடுத்த வாக்குறுதியினையே இப்போது நிறைவேற்றவில்லை. இதில் மீண்டும் ஒரு வாக்குறுதியை அளித்திருப்பதை எப்படி நம்புவது? என்ற எண்ணத்தில்தான், ’’2026 தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பைச் செய்துள்ளது அதிமுக. அதனால் எங்களுடைய அரசியல் நகர்வும் 2026 தேர்தலை கருத்தில் கொண்டே அமையும். 2026 ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம். இங்கு அரசியல் என்பது தேர்தலை நோக்கித்தான் செல்கிறது. எல்லா கட்சிகளின் நிலைப்பாடு இதுதான். தேமுதிகவின் நிலைப்பாடும் இதுதான்’’ என்கிறார்.

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது என்று இபிஎஸ் சொல்லி இருக்கும் நிலையில் பிரேமலதாவின் பேச்சு சுமூக இருப்பதாக சொல்லவில்லை.
அன்புமணி நன்றி விசுவாசம் காட்டவில்லை என்று இபிஎஸ் நினைத்தால், கடந்த 2002இல் பாமகவுக்கு சீட் தருவதாகச் சொல்லிவிட்டு பின்பு அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே ஜெயலலிதா. இதை என்ன சொல்வது என்கிறார்கள். ஜெயலலிதாஅதே முதுகுகில் குத்தும் அரசியல் பாணியை கையில் எடுத்திருக்கிறாரா இபிஎஸ்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
பாமகவுக்கும் மட்டுமா வாய்பாஜையை கதறவைத்து பாஜக முதுகில் குத்தியதால்தான் இப்போதும் விடாமல் அதிமுக முதுகில் குத்திக் கொண்டிருக்கிறது பாஜக.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரையிலும் ஹவுஸ்ஃபுல் ஆக இருப்பதால் அதிமுகவை விட்டால் தேமுதிகவுக்கு வேறு கதி இல்லை என்ற நினைப்பில்தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் எப்படி இருந்தாலும் கூட்டணிக்கு வந்துதான் ஆகவேண்டும் எனும் நினைப்பில் இபிஎஸ் உள்ளார். அவரின் இந்த நினைப்பில் மண்ணை அள்ளிப்போடும் போலிருக்கிறது தேமுதிகவின் கடலூர் மாநாடு என்றே செய்திகள் பரவுகிறது.
அதே நேரம், ராஜ்யசபாவில் அதிமுகவின் பலத்தை நிரூபிக்கவே இபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். மற்றபடி தேமுதிகவின் முதுகில் குத்தும் எண்ணம் அவருக்கு இல்லை. எதிர்க்கட்சித்தலைவர் ஆனதும் சட்டப்பேரவையில் திடீரென்று எகிறி விஜயகாந்த் போன்று அவர் ஒன்றும் முதுகில் குத்தவில்லை எனும் விமர்சனமும் வருகிறது.