நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த மோதலுக்கான பின்னணி என்ன என்பதை இங்கே தெளிவாக பார்க்கலாம்.
சர்ச்சையின் தொடக்கம்
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (A.R.Rahman), ஹிந்தி திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு முன்புபோல் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று கூறினார். இதற்குப் பின்னணியில் அதிகார மாற்றங்கள் மட்டுமல்லாமல், சில சமயங்களில் ‘வகுப்புவாத’ அல்லது சமூக அடிப்படையிலான மனநிலைகளும் காரணமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். மேலும், சிலர் மறைமுகமாக தனது பணிகளைத் தடுக்க முயல்கிறார்கள் என்ற வகையிலும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு பாலிவுட்டில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.

கங்கனா ரனாவத்தின் கடும் விமர்சனம்
இதனையடுத்து, ரஹ்மானின் இந்த கருத்துக்கு உடனடியாக பதிலளித்த கங்கனா ரனாவத், (Kangana Ranaut) தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் ஒரு காவி கட்சியான பாஜகவை ஆதரிப்பதால் பாலிவுட்டில் பல பாரபட்சங்களையும் வெறுப்பையும் சந்தித்துள்ளேன் என்றும் ஆனால், உங்களைப் போல இவ்வளவு வெறுப்புணர்வும் பாரபட்சமும் கொண்ட ஒருவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்றும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, ரஹ்மானின் பேச்சு தேவையற்ற பிரிவினையை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், என்னவென்றால் இந்த மோதலுக்குப் பின்னணியில் தனிப்பட்ட அனுபவமும் இருப்பதாக கங்கனா கூறினார். தானே இயக்கி, நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானை இசையமைப்பதற்காக அணுகியபோது, அவர் அந்தப் படத்தைப் பார்ப்பதற்கே மறுத்ததாகவும், அதை ஒரு “பிரச்சாரப் படம்” என்று கூறி தன்னைச் சந்திக்க கூட விரும்பவில்லை என்றும் கங்கனா குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் தன்னை ஆழமாக காயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் அமைதியான பதில்
கங்கனாவின் நேரடி குற்றச்சாட்டுகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வெளிப்படையாக பதிலளிக்கவில்லை. ஆனால், தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஒரு வீடியோவில், தான் ஒரு இந்தியர் என்றும், இசை தான் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி என்றும் கூறினார். தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.(Online Tamil News)

தொடரும் விவாதம்
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டில் அரசியல், கருத்தியல் பாரபட்சம், மற்றும் திரைப்படங்களை வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கலாமா என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இரு தரப்பாகப் பிரிந்து, கங்கனா – ரஹ்மான் விவகாரத்தை தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.


