சொந்த வீடு என்பது நம்மில் பலரது வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால், மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவர் பல கோடி மதிப்பில் வாங்கியுள்ள குடியிருப்பு கட்டிடத்தின் விலை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
லீனா காந்தி திவாரி என்பவர் USV லிமிடெட்டின் தலைவரான உள்ளார். இந்நிறுவனத்தை இவரது தந்தை விட்டல் காந்தி 1961-ல் தொடங்கினார். அவரது மறைவைத் தொடர்ந்து நிறுவனத்தின் பொறுப்புக்களை லீனா திவாரி ஏற்றார். இவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கூறப்படுகிறது.
இவர் சமீபத்தில் மும்பை வோர்லி பகுதியில் கடல் நோக்கிக் கட்டப்படும் நமன் சானா கட்டிடத்தில் 32 முதல் 35வது தளம் வரை அமைந்துள்ள குடியிருப்பை வாங்கியுள்ளார். 22,572 சதுர அடி பரப்பளவு கொண்ட இதன் விலை ரூ.639 கோடியாகும். சது அடி ரூ.2.83 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவிற்கான வரி மட்டும் ரூ.63.9 கோடியாகும். ஆக மொத்தம் ரூ.703 கோடி செலவு செய்து இதனை அவர் வாங்கியுள்ளார்.
நகரமயமாக்கல் விளைவாக நகரங்களில் பரப்பளவு விரிந்து கொண்டே செல்கிறது. மும்பை மாதிரியான மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நகரத்தில் குடியிருப்பு கட்டிடங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
விலை அதிகரித்தபோதிலும் பிரபலங்கள், தொழிலதிபர்கள் விலையுயர்ந்த குடியிருப்புகளை வாங்க முனைப்புக்காட்டி வருவது தொடர்ந்த வண்ணமே உள்ளது. உதாரணமாக சில காலம் முன்னர் கோடாக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் மற்றும் அவரது குடும்பத்தினர் அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு சொகுசு குடியிருப்பை வாங்கியுள்ளனர். அதன் விலை ரூ.400 கோடி. அந்த வைகையில் இப்படிப் பல கோடி மதிப்பில் குடியிருப்பு வாங்குபவர் வரிசையில் தற்போது லீனா திவாரியும் இணைந்துள்ளார்.