கும்பமேளாவில் பாசிமணி விற்றுக்கொண்டிருந்தபோது, தனது அபார அழகால் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் வைரலாகி, ஒட்டுமொத்த இணையதளவாசிகளின் கவனத்தையும் ஈர்த்தவர் மோனாலிசா போஸ்லே.

இந்தத் திடீர் புகழின் காரணமாக அவருக்குப் பாலிவுட் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் உருவாகும் ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ (The Diary of Manipur) என்ற இந்தித் திரைப்படத்தில் மோனாலிசா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார்.

ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அவர் தற்போது வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தன்னிடம் மிகவும் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் ரீதியாகத் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தன்னைத் தனிமையில் அழைத்துச் சென்று உடல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து மோனாலிசா தனது குடும்பத்தினரிடம் அப்போதே தெரிவித்துள்ளார். ஆனால், இது அவருடைய முதல் படம் என்பதால், அவரது குடும்பத்தினர் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருந்ததாக மோனாலிசா குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே சனோஜ் மிஸ்ரா மீது டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாயக் கருக்கலைப்பு புகார்களை அளித்து, அவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘கும்பமேளா புகழ்’ மோனாலிசாவும் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தைரியமாக வெளியே சொல்லியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


