ஜெயலலிதா இருந்த வரையிலும் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார் சசிகலா. ஜெயலிதாவின் மறைவுக்கு பின்னர் தன்னை ஜெயலலிதா போன்று பாவித்துக்கொண்டு அவரைப்போலவே நடை உடை பாவனையில் மாறினார் சசிகலா. கடைசியில் அசைக்க முடியாத அந்த சக்தியை இழந்து நின்றதுதான் மிச்சம்.
சக்தியை இழந்தும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றே இத்தனை காலமும் சொல்லி வந்தார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி பளைய ஆள் அல்ல என்பதை நிரூபித்து விட்டதால், விலக்கப்பட்டவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டதால் இலவு காத்த கிளி கதை என்பது உறுதியாகிவிட்டதால் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகிவிட்டார்.

அமமுக என்கிற கட்சி இருந்ததால் டிடிவி தினகரனை கூட்டணிக்குள்ளாவது வர சம்மதித்தார் பழனிசாமி. தனிக்கட்சி இல்லாததால்தான் பன்னீர்செல்வம் அல்லாடிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துள்ளார் சசிகலா. அதனால் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
வரும் 24ம் தேதி அன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இதற்காக அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. அது தொடர்பாக அவர் ஆதரவாளர்களிடையே ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார் சசிகலா. இதற்கான பந்தல்கால் நடுவிழாவினை செய்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த விழாவில் புதுக்கட்சி அறிவிப்பை சசிகலா வெளியிட உள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சசிகலா எடுத்த இந்த அஸ்திரத்தால் ஆடிப்போயிருக்கிறது என்.டி.ஏ. தலைமை.



