மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுகவின் அதிகார மையமாகத் திகழ்ந்த சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடையேயான உறவில் தற்போது பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து திரும்பிய பிறகு சசிகலா மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார் என்றும், தினகரன் அவருக்குப் பக்கபலமாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் வெவ்வேறு துருவங்களாகச் செயல்பட்டு வருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமமுக கட்சியைத் தொடங்கிய தினகரன், கட்சியைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதும், சசிகலாவின் ஆதிக்கம் கட்சிக்குள் மீண்டும் வருவதைத் தற்காத்துக் கொள்ள முயல்வதுமே இந்த மோதலின் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக சசிகலா மேற்கொள்ளும் அரசியல் பயணங்கள் மற்றும் அவர் வெளியிடும் அறிக்கைகளில் தினகரனின் பெயர் தவிர்க்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. மேலும், குடும்ப உறவுகளுக்குள் இருந்த நெருக்கம் குறைந்து, அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் மறைமுகமாக விமர்சிக்கும் சூழல் உருவாகியுள்ளது.மேலும், சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் தினகரனின் தன்னிச்சையான முடிவுகளால் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் சசிகலாவின் பின்னால் அணிதிரளத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த அதிகாரப் போட்டியின் உச்சகட்டமாக, கட்சிப் பதவிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விவகாரங்களிலும் இருவருக்கும் இடையே சுமுகமான பேச்சுவார்த்தை இல்லை எனத் தெரிகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வை வீழ்த்த இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியம் எனப் பரவலாகப் பேசப்பட்டாலும், “யார் பெரியவர்?” என்ற ஈகோ மோதல் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.(Online Tamil News)

சசிகலாவைச் சந்தித்த அமமுக நிர்வாகி நீக்கம் :
வழக்கறிஞரான ஜீவிதா நாச்சியார், அமமுகவில் மாணவியர் அணி செயலாளராகவும், திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்த டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்நிலையில், சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதற்காக ஜீவிதா நாச்சியார் கட்சியில் இருந்கியான ஜீவிதா நாச்சியார் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த ஜீவிதா நாச்சியார், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுக்கும் முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, ஜீவிதா நாச்சியாரைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். சசிகலா – தினகரன் இடையே அரசியல் ரீதியான விரிசல் அதிகரித்துள்ள சூழலில், சசிகலாவைச் சந்திக்கும் நிர்வாகிகள் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, அமமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


