அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள ஒரு அதிரடி முடிவு சர்வதேச அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் மேகங்களுக்கு இடையே, அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனிடையே,ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை அடுத்த 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து,”பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கபூர்வமாக உள்ளன என்றும் ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, உலக நாடுகளின் கவலைக்குக் காரணமாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் பிடிவாதம் காட்டினால், அந்நாட்டின் மின் உள்கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்படும் என 48 மணிநேரக் கெடுவை அமெரிக்கா விதித்திருந்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இந்த 5 நாள் இடைவெளியானது வெறும் தாக்குதல் நிறுத்தம் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரத்திலும் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் பயத்தால் தாறுமாறாக உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை, டிரம்பின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு சற்றே சரியத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்குத் தனது உத்தரவைப் பிறப்பித்துள்ள டிரம்ப், இந்த வார இறுதிக்குள் ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.(Online Tamil News)


