கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்(karur stampede) தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் (TVKVijay) சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு முறை விசாரணைக்கு ஆஜரான விஜய், இன்று மீண்டும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இந்த இரண்டாம் கட்ட விசாரணையில், கரூரில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரை நேரில் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 12ஆம் தேதி விஜய் முதன்முறையாக டெல்லி சிபிஐ (CBI) அலுவலகத்தில் ஆஜராகி சுமார் 7 மணி நேரம் விசாரணைக்கு உட்பட்டார். அப்போது, அவர் ஏன் பரப்புரைக்கு தாமதமாக வந்தார், கூட்ட நெரிசல் ஏற்பட்டதை கவனித்தாரா, சம்பவம் குறித்து எப்போது தகவல் கிடைத்தது என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவரிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ விளக்கமும் பெறப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 19) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, அவர் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்து காலை 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

இன்றைய விசாரணையில், “கூட்ட நெரிசலை நீங்கள் கவனிக்கவில்லையா?”, “நீர்பாட்டில்களை வீசியபோது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றதை பார்க்கவில்லையா?”, “நெரிசலை தடுக்க வாகனத்தை நிறுத்தியிருக்கலாம் அல்லவா?” போன்ற கடுமையான கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். மேலும், பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான உங்களுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடும் என்பது தெரியாதா? கரூர் பரப்புரை கூட்டத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன? எனவும் சிபிஐ கேள்வி எழுப்பியுள்ளது.
கரூருக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதற்கு சாலைகளில் உள்ள வளைவுகள் காரணம் என்றால், அதற்கான ஆதாரங்களை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தயாராகும் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த விஜய், “சூழ்நிலை மேலும் மோசமாகும் என காவல்துறை தெரிவித்ததால் கரூரை விட்டு வெளியேறினேன். காவல்துறை அமைத்து கொடுத்த பாதையில்தான் பயணம் செய்தேன். கூட்ட நெரிசலின் போது த.வெ.க தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டும்” என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இது அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



