சேலம் மாவட்டத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டமானது பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் குறைவானர்கள் தான் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, இந்த கூட்டத்தில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. இதன் காரணமாக கடும் வெயிலில் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக நின்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், இக்கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து, அவரை உடனடியாக அங்குள்ளோர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்தார். (Online Tamil News)
இதனைத்தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தவர் பெயர் சுராஜ் (37) என்பதும், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவர் சேலத்தில் உள்ள வெள்ளி பட்டறை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


