உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சுக்லகஞ்ச் ராகுல் சப்ரூ மைதானத்தில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவத்தில், கிரிக்கெட் நடுவர் ஒருவர் தேனீக்கள் கடித்ததில் உயிரிழந்தார்.
கான்பூர் கிரிக்கெட் சங்கம் சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான லீக் போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மைதானத்திற்கு அருகிலிருந்த மரத்திலிருந்து ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வீரர்கள் மற்றும் நடுவர்களைத் தாக்கத் தொடங்கின.
இந்த எதிர்பாராத தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் நாலாபுறமும் ஓடிய நிலையில், 65 வயதான மூத்த நடுவர் மாணிக் குப்தா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரைச் சூழ்ந்துகொண்ட தேனீக்கள் சரமாரியாகக் கொட்டியதில் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் கான்பூரில் உள்ள எல்.எல்.ஆர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடன் மற்றொரு நடுவரான ஜெகதீஷ் சர்மா மற்றும் சுமார் 20 இளம் கிரிக்கெட் வீரர்களும் தேனீக்கடியால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 30 ஆண்டுகளாக நடுவராகப் பணியாற்றி வந்த மாணிக் குப்தாவின் இந்த மரணம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


