முன்னாள் சபாநாயகர் தனபால். அதிமுகவின் மூத்த அரசியல்வாதியான இவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவருடனும் அரசியல் பழகியவர். அதிமுகவில் 7 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் தனபாலுக்கு, அவிநாசி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான இவருக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் மறுத்திருக்கிறார் எடப்பாடி. தனபாலுக்கு கொடுக்காமல் புறக்கணிக்கவே இந்த தொகுதியை பாஜகவுக்கு தாரை வார்த்திருக்கிறார் எடப்பாடி என்கிறார் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது போர்க்கொடி தூக்கிய 18 எம்.எல்.ஏக்களை பேரவையிலிருந்து தகுதிநீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்தார் என் அப்பா. அந்த நன்றி விசுவாசம் கூட இல்லை அவருக்கு என்று ஆத்திரப்படுகிறார் லோகேஷ்.
அவர் மேலும், என் அப்பா ஹார்ட் அட்டாக்கில் சிகிச்சையில் இருந்தபோதும் வந்து பார்க்கவில்லை எடப்பாடி. இதனால்தான் மனம் வெறுத்து நான் தவெகவில் இணைந்தேன். பாஜகவின் அழுத்தத்தால் அப்பாவுக்கு அவிநாசி தொகுதி இல்லாமல் போனாலும் வேறு தொகுதி ஒதுக்கி இருக்கலாம். சர்வாதிகாரி எடப்பாடிக்கு அந்த மனமில்லை. எடப்பாடியின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தினால்தான் ஆதரவாளர்களிடமும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும் குமுறி வெடித்துக்கொண்டிருக்கிறார் அப்பா என்கிறார் லோகேஷ்.

அதிருப்தியில் இருக்கும் தனபால் லோகேஷ் மூலம் தவெகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது அவிநாசி அதிமுக வட்டாரம்.



