ஜல்லிக்கட்டு என்பது வெறும் வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்ல; அது தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடைப்பிடித்த ஒரு நுட்பமான இனவிருத்தி அறிவியல் ஆகும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர் சமூகம், மனிதன் மட்டுமல்லாமல் கால்நடைகளின் வலிமை, ஆரோக்கியம் மற்றும் சந்ததித் தொடர்ச்சியையும் அறிவியலுடன் திட்டமிட்டு பாதுகாத்துள்ளது என்பதற்கு ஜல்லிக்கட்டு சிறந்த சான்றாக விளங்குகிறது.
ஜல்லிக்கட்டில் (Jallikattu) ஒரு வீரர் காளையை அடக்குவது என்பது அதன் கொம்பையோ வாலையோ பிடிப்பது அல்ல. காளையின் திமிலைப் பிடித்து, அதன் துள்ளல் மற்றும் வேகத்தை சமாளித்து ஒரு குறிப்பிட்ட தூரம் பயணிப்பதே உண்மையான வீரத்திற்கான அளவுகோலாகும். இந்தச் செயல்முறை, அந்தக் காளையின் உடல் வலிமை, சுறுசுறுப்பு மற்றும் தைரியத்தை நேரடியாக வெளிப்படுத்துகிறது. எந்தக் காளை மனிதர்களின் முயற்சியையும் மீறி திமிறி வெற்றி பெறுகிறதோ, அந்தக் காளை தான் இனவிருத்திக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதன் மூலம் பலவீனமான காளைகள் இயற்கையாகவே புறக்கணிக்கப்படுகின்றன. வலிமையான காளைகளின் சந்ததி மட்டும் தொடர்கிறது. இது இன்றைய அறிவியல் கூறும் “Natural Selection” முறையை ஒத்த ஒரு பழமையான நடைமுறையாகும்.

ஜல்லிக்கட்டின் போது திமிலைப் பிடிக்கும் செயல், மனிதனுக்கும் மாட்டுக்கும் இடையே ஒரு நேரடி உடல்–மன பிணைப்பை உருவாக்குகிறது. வெளிநாட்டு மாடுகளுக்கு இந்தத் திமில் இல்லாததால், அவை ஜல்லிக்கட்டுக்குப் பொருத்தமற்றவையாகக் கருதப்படுகின்றன. இதுவே நாட்டு மாடுகளின் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.(Online Tamil News)
ஜல்லிக்கட்டு ஒரு விவசாயிக்கு பொருளாதார ரீதியாகவும் ஒரு பாதுகாப்பு அமைப்பாக செயல்படுகிறது. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார் செய்வது என்பது, அதை வெறும் கால்நடையாக அல்லாமல் குடும்ப உறுப்பினராகப் பார்த்து வளர்ப்பதைக் குறிக்கும். நல்ல உணவு, பயிற்சி, பராமரிப்பு ஆகியவை அந்தக் காளைக்கு வழங்கப்படுகின்றன. இதனால் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றின் இனமும் அழியாமல் தொடர்கிறது. ஜல்லிக்கட்டு இல்லாத சூழலில், நாட்டு மாடுகள் பராமரிப்பில்லாமல் இறைச்சிக்காக விற்கப்படும் அபாயம் அதிகரிக்கும். எனவே, ஜல்லிக்கட்டு என்பது நாட்டு மாடுகளுக்கான “முதலீடு இல்லாத காப்பீடு” என்றே சொல்லலாம்.
இதனால் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டாக மட்டுமல்லாமல், தமிழர்களின் உயிரியல் அறிவு, கால்நடை பாதுகாப்பு (Animal protection) , விவசாய பண்பாடு மற்றும் இயற்கை சார்ந்த வாழ்வியல் முறையின் ஒருங்கிணைந்த வடிவமாக விளங்குகிறது. இதன் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளும்போது, ஜல்லிக்கட்டு தமிழர் மரபின் ஆழமான அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடாக நம்முன் நிற்கிறது.


