அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்திற்கு முதன்மையான காரணம் ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளே ஆகும். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில், அதே நேரத்தில் ஈரான் தனது தற்காப்புக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் இத்திட்டம் அவசியம் என்கிறது. மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கம் அதிகரிப்பதும், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எதிர்ப்பாளராக இருப்பதும் இந்த மோதலைத் தீவிரப்படுத்துகிறது. சமீபகாலமாக இரு நாடுகளும் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கடல்வழி மோதல்களில் நேரடியாக ஈடுபட்டு வருவதும், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில், ஈரான் (Iran) மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தீவிர அரசியல் மோதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரானில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க தூதரகம் மிக அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை மற்றும் பிராந்திய ரீதியிலான பதற்றங்கள் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானில் நிலவும் உள்நாட்டு குழப்பங்கள் அமெரிக்கர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாகக் கைது செய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ அதிக வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை நிலைமை மோசமடைந்தால் தூதரக ரீதியான உதவிகளை வழங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.
மோசமடைந்து வரும் உள்நாட்டு சூழல்
தற்போது ஈரானில் ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விமான சேவைகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ரத்து செய்யப்படலாம் என்றும், இணையம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் முழுமையாக முடக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தகவல் தொடர்பு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டால் வெளியேறுவது மிகவும் கடினமாகிவிடும் என்பதால், வணிக ரீதியான போக்குவரத்து வசதிகள் தடையின்றி கிடைக்கும்போதே அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.(Online Tamil News)
அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
ஒருவேளை உடனடியாக வெளியேற முடியாத நிலையில் உள்ளவர்கள், பாதுகாப்பைக் கருதி போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறும் இடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அவசர காலத் தேவைகளுக்காக அத்தியாவசியமான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளைக் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தூதரக உறவு இல்லாத காரணத்தால், சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வாயிலாகவே அமெரிக்கா தனது குடிமக்களுக்குத் தேவையான உதவிகளைத் தற்போது ஒருங்கிணைத்து வருகிறது.


