சென்னை மக்களை மேலும் மேலும் வதைக்கிறது ரயில்வே துறை. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் 10,11ல் கடந்த 20ம் தேதி முதல் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகள் 45 நாட்கள், அதாவது ஏப்ரல் 5ம் தேதி வரையிலும் நடந்து வரும் என்பதால் கடந்த 5 நாட்களாக 42 புறநகர் ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எழும்பூரில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் வரையிலும் சிக்னல் கோளாறுகள் ஏற்பட்டு பல மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.
இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் என்று லட்சக்கணக்கான பயணிகள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். ரயில்சேவை பாதிப்பினால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இம்மக்களை மேலும் வதைக்கும் விதமாக இன்று முதல் மேலும் 49 ரயில் சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நவீன யுகத்திலும் பராமரிப்பு பணிகளுக்காக 45 நாட்களா எடுத்துக்கொள்வார்கள்? மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் மக்களை வதைப்பது ஏன்? என்று குமுறி வெடிக்கின்றனர் சென்னை மக்கள்.



