இந்தியாவில் கருணைக்கொலை என்பது சட்டப்பூர்வமானதா? – இந்தக் கேள்வியை 2018 ஆம் ஆண்டிற்கு முன்னால் கேட்டால் இல்லை என்றுதான் பதில் கிடைத்திருக்கும்.
2018ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது. அதுவும் பேசிவ் யுத்தனேஷியா எனும் ’செயலற்ற கருணைக்கொலை’ மட்டும்தான் சட்டப்பூர்வமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வலி , துன்பத்தை போக்க வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் நடைமுறைதான் கருணைக்கொலை என்றாலும் இதை தன்னார்வ கருணைக்கொலை, தன்னார்வமற்ற கருணைக்கொலை, நேர்மறை கருணைக்கொலை, எதிர்மறை கருணைக்கொலை (PASSIVE EUTHANASIA) அதாவது செயலற்ற கருணைக்கொலை , தன்னிச்சையான கருணைக்கொலை என்று வகைப்படுத்துகின்றது மருத்துவத்துறை.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மருத்துவ அறிக்கைகளிலும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவின் அறிக்கைகளிலும்PASSIVE எனும் வார்த்தை அதிகம் காண முடிந்தது.

கருணைக்கொலை ஏன் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும்? கருணைக்கொலை ஏன் சட்டப்பூர்வமாக இருக்கக்கூடாது? என்று நீண்டகால பொது விவாதங்கள் இருந்து வந்த நிலையில், செவிலியர் அருணா ஷான்பாக் மரணம்தான் செயலற்ற கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்க வழிவகுத்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1973ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று கே.இ.எம். தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வந்த அருணா ஷான்பாக், அதே மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அம்மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி சோகன்லால் பர்தா வால்மீகியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, நாய் சங்கிலியால் கழுத்து நெரிக்கப்பட்டதில் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபட்டதால் நினைவற்ற நிலைக்கு சென்றார்.
திருமணக்கனவுகளுடன் இருந்த 25 வயது செவிலியர் அருணா ஷான் பாக்கின் வாழ்க்கையை சிதைத்த அந்த சோகன்லால் பர்தா வால்மீகி 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் 1980ல் விடுதலையாகிவிட்டார். ஆனால்,
42 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவற்ற நிலையில் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் இருந்தார் அருணா ஷான்பாக்.

அர்த்தமுள்ள வழியில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் இருக்கும் அருணா ஷான் பாக் கண்ணியத்துடன் இறப்பதற்காகவாவது அனுமதிக்க வேண்டும் என்று 2011ம் ஆண்டில் அருணா ஷான்பாக்கிற்கு கருணைக்கொலை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த சட்டப்போராட்டம் தோல்வி அடைந்தது. மூளைச்சாவு அடைந்தாலும் சில நேரங்களில் செவிலியர்களின் செயல்பாடுகளுக்கு அசைவின் மூலம் பதிலளிக்கிறார். அதனால் கருணைக்கொலை செய்ய முகாந்திரம் இல்லை. மூளைச்சாவடைந்து செயலற்ற நிலையில் இருப்பவரையே அதுவும், நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள், பராமரிப்பாளர்களிடம் இருந்து கோரிக்கை வந்தால்தான் கருணைக்கொலைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சொல்லி ஊடகவியலாளர் பிங்கி விராணியின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

நினைவற்ற நிலையிலேயே செவிலியர்களின் பராமரிப்பில் இருந்து வந்த அருணா ஷான் பாக் 2015ம் ஆண்டில் மே மாதம் 18ம் தேதி அன்று நிமோனியாவால் உயிரிழந்தார். அருணா ஷான் பாக்கிற்கு அன்றைக்கு கருணைக்கொலைக்கான அனுமதி கிடைக்காவிட்டாலும் அருணா ஷான் பாக் வழக்கு நாடு முழுவதிலும் பொது விவாதத்திற்கு வித்திட்டது. அதன் மூலமாகத்தான் செயலற்ற கருணைக்கொலை சட்டப்பூர்வமானது.
பொதுநல வழக்காடு மையம் எனும் தனியார் தொண்டு நிறுவனத்தின் பொதுநல மனு மீதுதான், ஒருவரால் இனி உயிர் பிழைப்பது என்பது சாத்தியமில்லை என்று மருத்துவக்குழு அறிக்கை தந்தால் அவரை கருணைக்கொலை செய்யலாம் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

2018ல் செயலற்ற கருணைக்கொலை சட்டப்பூர்வமானாலும் பலருக்கும் இந்த சட்டத்தின்படி இறக்க நீதிமன்றங்கள் அனுமதி வழங்கவில்லை. 2026ம் ஆண்டில் இப்போதுதான் முதன்முறையாக செயலற்றை கருணைக் கொலைக்கு அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
13 ஆண்டுகாலம் நினைவற்ற நிலையில் இருந்த ஹரிஷ் ராணாவுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2013ல் சண்டிகரில் பொறியியல் படித்து வந்த ஹரிஷ் ராணா, 4ஆவது மாடியின் பால்கனியில் இருந்து விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு நினைவற்ற நிலைக்கு சென்றார். 13 ஆண்டுகளாக வீட்டிலேயே செவிலியர்கள் உதவியுடன் பராமரித்து வருகின்றனர் குடும்பத்தினர்.

நிதிச்சுமை ஒருபக்கம், மன உளைச்சல் ஒரு பக்கம் குடும்பத்தினரை நிம்மதி இழக்கச் செய்ய, கருணைக்கொலைக்கு அனுமதி கோரி 2018 மற்றும் 2023ல் நீதிமன்றம் சென்றும் இரு முறையும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூன்றாவது முறையாக வைத்த கோரிக்கை, மருத்துவ குழுவினரின் அறிக்கையின் படி ஹரிஷ் ராணாவுக்கு உயிர் வாழும் மருத்துவ சிகிச்சையை ரத்து செய்ய அனுமதி வழங்கி இருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பின் மூலம் ஹரிஷ் ராணா கண்ணியத்துடன் உயிரிழக்க முடியும்.

வாழ்வது எப்படி உரிமையோ, அதே மாதிரி கண்ணியத்துடன் இறப்பதையும் ஒரு உரிமையாக அறிவிக்க வேண்டும் என்ற சட்டப் போராட்டத்திற்குத்தான் 2018ல் செயலற்ற கருணைக்கொலையை இந்தியா சட்டப்பூர்வமாக்கியது.
தொடர்ச்சியான பொது விவாதங்களால் பெருகிய ஆதரவினால் இந்தியாவைப்போலவே பெல்ஜியம், கொலம்பியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் கருணைக்கொலை சட்டப் பூர்வமாக்கப் பட்டிருந்தாலும் கூட இச்சட்டத்திற்கு உலகம் முழுவதிலும் எதிர்ப்புகளும் வலுவாகத்தான் இருக்கின்றன.



