2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் (Union Budget 2026) பிப்ரவரி 1, 2026 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இது இந்திய பொருளாதாரத்தின் முக்கிய கட்டத்திற்கான பட்ஜெட் எனப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது வரிச் சட்டத்தை மாற்றியமைத்து வருமான வரி அமைப்பின் கீழான கடைசி பட்ஜெட்டாகவும் இருக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிச் சலுகைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
1. வருமான வரிச் சலுகைகள் – நடுத்தர வர்க்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு
- நடுத்தர மற்றும் சம்பளதாரர் வர்க்கம், இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க வருமான வரி நிவாரணங்களை எதிர்பார்க்கிறது.
தனிநபர் வருமான வரிக்கான நிலையான விலக்கு (Standard Deduction) தற்போதுள்ள ரூ.75,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது சம்பளதாரர்களின் கையிலிருக்கும் வருமானத்தை அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. - புதிய வரி விதிப்பு முறையில், தற்போது 30% வரி விதிக்கப்படும் உச்ச வருமான வரம்பை ரூ.30 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.
- மேலும், வீட்டுக் கடன் வட்டி, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் (80C, 80D) மீதான கூடுதல் வரிவிலக்குகள் வழங்கப்பட வேண்டும் என வரி செலுத்துபவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2. பொருளாதார மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி
- நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு வசதிகள் (Infrastructure) மீது அதிக முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலைகள், ரயில்வே, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழில் மண்டலங்களுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
- அதேபோல், மாநில அரசுகளுக்கான 50 ஆண்டுகால வட்டி இல்லா கடன் திட்டத்தின் நிதியை ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இது மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கமாக அமையும்.
3. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி
- விவசாயத் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் PM-KISAN, பயிர் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கான நேரடி நிதி உதவிகள் வலுப்பெறும்.
- மேலும், விவசாயக் கடன் அட்டைகள் (KCC), காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நவீன விவசாய நுட்பங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படலாம். (Online Tamil News)

4. தொழில்துறை மற்றும் MSME – வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் மையம்
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) நாட்டின் வேலைவாய்ப்பு முதுகெலும்பாக இருப்பதால், அவர்களுக்கான கடன் வசதிகளை எளிதாக்கவும், வரிச் சுமைகளை குறைக்கவும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் துறைகளுக்கு PLI (Production Linked Incentive) ஊக்கத்தொகைகளை விரிவுபடுத்தும் அறிவிப்புகள் வெளியாகலாம்.
- மேலும், MSME நிறுவனங்களின் மூலப்பொருட்கள் மற்றும் இறக்குமதி வரிகளில் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது.
5. காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் சமூக நல கோரிக்கைகள்
- சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்படும் 18% GST வரியை 5% ஆகக் குறைக்கவோ அல்லது முழுமையாக நீக்கவோ வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் வலுவாக உள்ளது.
- மூத்த குடிமக்களுக்கான வரி இல்லாத வருமான வரம்பை உயர்த்துதல், வங்கி வைப்பு வட்டிக்கு கூடுதல் வரிவிலக்கு வழங்குதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

- மேலும், EPS-95 ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பது ஓய்வூதியதாரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
6. பசுமை எரிசக்தி, AI மற்றும் எதிர்கால தொழில்நுட்பம்
மின்சார வாகனங்கள் (EV), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை உள்கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம்.
அதேபோல், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ் மற்றும் உயர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


