இங்கிலாந்தில் முதன்முறையாக உயிரிழந்த பெண்ணிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பொருத்தி, ஒரு பெண் வெற்றிகரமாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து மருத்துவ உலகில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

கிரேஸ் பெல் என்ற 30 வயதுப் பெண்மணி, பிறவியிலேயே கருப்பை சரியாக வளர்ச்சி அடையாத ‘MRKH’ (Mayer-Rokitansky-Küster-Hauser) எனும் அரிய வகை குறைபாட்டுடன் பிறந்தவர். இத்தகைய பாதிப்பு கொண்ட பெண்களுக்குச் சினைப்பைகள் இருந்து கருமுட்டை உருவானாலும், கருப்பை இல்லாத காரணத்தால் அவர்களால் இயற்கையாகக் கருத்தரிக்க இயலாது. இதனால், கடந்த 2023-ஆம் ஆண்டு மூளைச்சாவு அடைந்த ஒரு பெண்ணின் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பொருத்தினர்.
இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, லண்டனில் உள்ள குயீன் சார்லோட்ஸ் மற்றும் செம்பியா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்த கிரேஸ், செயற்கை கருத்தரிப்பு (IVF) முறையில் கருவுற்றார். கடந்த டிசம்பர் மாதம் 3.09 கிலோ எடையில் ‘ஹியூகோ’ என்ற அழகான ஆண் குழந்தையை அவர் பெற்று எடுத்தார். உயிரிழந்த ஒருவரின் உறுப்பு மூலம் இங்கிலாந்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாகும். குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பொருத்தப்பட்ட கருப்பையை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஏனெனில், மற்ற உறுப்புகளைப் போலன்றி கருப்பை உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானது அல்ல என்பதால், அந்த மாற்று உறுப்பை உடல் நிராகரிக்காமல் இருக்க வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டிய ‘நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும்’ (Immunosuppressants) மருந்துகளின் தேவையையும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உலகளவில் இதுவரை சுமார் 30 குழந்தைகள் மட்டுமே இத்தகைய முறையில் பிறந்துள்ளனர். பொதுவாக உடல் உறுப்பு தானப் பட்டியலில் கருப்பை இடம்பெறுவதில்லை என்பதால், தானம் செய்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த தனிப்பட்ட சம்மதமே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தனது மகனின் பிறப்புக்குக் காரணமான அந்தத் தானம் வழங்கிய குடும்பத்திற்கு கிரேஸ் பெல் தனது நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்த மிகப்பெரிய வெற்றி, கருப்பை பாதிப்பு காரணமாகத் தாயாகும் கனவை இழந்த பல பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


