ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆர்.என்.ரவி, ஆளுநராக வந்ததுமுதல் ஒரு ஆண்டு கூட ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் வெளிநடப்பு செய்து விடுகிறார். இந்த 2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறிவிட்டார்.
2023 – 2026 என்ன பிரச்சனை?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், கூட்டத்தொடர் நிறைவுறும்போது தேசிய கீதமும் இசைக்கப்படுவது வழக்கம். தமிழ்நாட்டின் இந்த சட்டப்பேரவை மரமை மாற்றச் சொல்கிறார் ஆர்.என்.ரவி. இதுதான் பிரச்சனை.

நாடாளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் கூட்டத்தொடர் நடத்தப்படுவது போன்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த 2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் போது இந்த பிரச்சனையை ஆரம்பித்த ஆர்.என்.ரவி, 2024, 2025,2026 என்று ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் தொடர்கிறார்.
2023இல் 4 நிமிடங்கள் மட்டுமே ஆளுநர் உரையை வாசித்தார் ஆர்.என்.ரவி. முதல் பக்கத்தில் உள்ளதை படித்துவிட்டு சில கருத்துக்களை தெரிவித்தார். பின்னர், ‘’வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஹெய்ஹிந்த், ஜெய்பாரத்’’ என்று சொல்லி உரையை முடித்தார்.
அதன் பின்னர் ஆளுநர் இருக்கையில் அமர்ந்ததும் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் ஆங்கிலத்தை தமிழாக்கம் செய்தார். உரையை வாசித்த பின்னர் அப்பாவு சில கருத்துக்களை சொன்னார். அதில் ஆளுநர் குறித்தும் சொன்னார். அதைக்கேட்டு அதிர்ச்சியாகி சபையில் இருந்து வெளியேறினார் ஆர்.என்.ரவி. அடுத்தடுத்த ஆண்டுகளில் உரையை வாசிக்காமலேயே வெளியேறிவிடுகிறார் ஆர்.என்.ரவி.

ஆளுநரின் அடம் – அரசின் உறுதி:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்குத்தான் முன்னுரிமை என்பதால் அதை மாற்ற மறுக்கிறது அரசு. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து. இறுதியில் தேசிய கீதம். இந்த மரபு தமிழ்நாட்டில் என்றைக்கும் மாறாது என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனாலும் இந்த மரபை மாற்றச் சொல்லி இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரிலும் அடம் பிடித்தார் ஆளுநர்.
என்னதான் சிவப்பு கம்பளம் வரவேற்பு எல்லாம் அளித்தாலும் கூட, தேசிய கீதம் – தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனையை எழுப்பவதிலேயே கவனமாக இருந்துள்ளார் ஆர்.என்.ரவி. தேசிய கீதம் முதலில் ஒலிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிவிட்டார் ஆர்.என்.ரவி. எவ்வளவு தாழ்ந்து போய் கேட்க முடியுமோ அவ்வளவு தாழ்ந்து போய் சபாநாயகர் அப்பாவு கேட்டுப்பார்த்தும், வெளியேறிவிட்டார்.

சபையின் சட்டத்திற்கு உட்பட்டு சபாநாயகர் நடந்தாலும் கூட சபையின் மாண்பை புறக்கணித்துவிட்டு ஆளுநர் வெளியேறிவிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து போலவே தேசிய கீதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அதற்கு கூட்டத்தொடரின் முதலிலேயே தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது? என்பது பாஜக தரப்பு வாதமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் பேசும்போது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். அதனால்தான் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என பாஜக தரப்பு குற்றச்சாட்டாகவும் இருக்கிறது.
ஆர்.என்.ரவியின் வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல விசயங்கள் இருந்தது ஒரு காரணம் என்றும், ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேச அனுமதிக்கவில்லை. இது முக்கிய காரணம் என்றும் கூறி இருக்கிறது.
என்ன நடந்தது? ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதா?
ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டது என்று ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டுக்கு, கேள்விக்கு,’’ஒருவர் பேசும்போது இன்னொருவர் குறுக்கிடக்கூடாது என்பதற்காக மைக் ஆஃப் செய்யப்படும். அது மாதிரி இன்றைக்கு நான் பேசும்போது, ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்’’ என்கிறார் சபாநாயகர் அப்பாவு.
மைக் ஆஃப் செய்யப்பட்டது என்று ஆளுநர் மாளிகை அழுத்தமாக குற்றம்சாட்டுகையில், மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம் என்பதே அரசு தரப்பு விளக்கமாக இருக்கிறது.



