நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் கடைசியாக ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.
சென்சார் சிக்கல்
இதனைத்தொடர்ந்து, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) முதலில் ஜனநாயகன் (Jananayagan) படத்திற்கு சான்றிதழ் வழங்க தாமதம் செய்தது. இதனால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.
தனி நீதிபதி உத்தரவும் மேல்முறையீடும்
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சென்சார் வாரியம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது தவறு எனக் கூறி, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்தது. (Online Tamil News)
மீண்டும் விசாரணை – வெளியீடு கேள்விக்குறி
இந்த நிலையில் மேல்முறையீட்டு அமர்வு, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை அவசியம் எனக் கூறி, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்பியது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை. படத்தின் வெளியீட்டு தேதி தற்போது உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது. இந்த வழக்கு முடிவுக்கு வந்த பிறகே படத்தின் திரையரங்க வெளியீடு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


