தவெகவில் இணைந்து நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆனதில் இருந்தே தன்னைத் தொடர்ந்து மேலும் பல மாஜிக்கள் தவெகவுக்கு வர இருப்பதாக சொல்லி வந்தார் செங்கோட்டையன்.
தை பிறக்கட்டும், அப்புறம் பாருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்து வந்தார். அடுத்து தை பிறப்பதற்கு முன்பே வழி பிறக்கும் என்று சொல்லி வந்தார் செங்கோட்டையன். டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தவெகவுக்கு வர இருப்பதாக பேச்சு வார்த்தைகள் நடந்து வந்த நிலையில் அப்படி சொல்லி வந்தார் செங்கோட்டையன்.

இவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்த டெல்லி மேலிடம், டிடிவி தினகரனை தவெகவுக்கு செல்லாமல் என்.டி.ஏ. பக்கம் இழுத்துப்போட்டது. இப்படி பலரையும் தவெக பக்கம் போகாமல் செய்துவிட்டது டெல்லி மேலிடம்.
இப்போது மேலும் பலர் தவெகவோடு கூட்டணி பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றி வெளியே சொன்னால் அவர்களையும் கொத்தாக தூக்கிவிடுவார்கள் என்பதால் கொஞ்ச நாளைக்கு இது பற்றி எதுவும் பேசாமல் இருங்கள் என்று செங்கோட்டையனுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கிறார் விஜய். குறிப்பாக 2 நாளைக்கு எதுவும் பேசாமல் இருங்கள் என்று சொல்லி இருக்கிறார் விஜய்.

இதைத்தான் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராமதாஸ், ஓபிஎஸ்சுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்ற கேள்விக்கு, ’’டிடிவி தினகரன் தவெகவுடன் கூட்டணி வைக்கத்தான் விரும்பினார். சூழ்நிலைதான் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். நாங்கள் யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை வைத்தாலும் உடனே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள். அதனால் அதுபற்றி எதுவும் நான் சொல்லாமல் இருக்கும் வரை நல்லது’’என்று எஸ்கேப் ஆகி இருக்கிறார்.



